திருவள்ளூர் பகுதிகளில் தொடர்மழையால் நிரம்பும் ஏரிகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து சில நாள்களாக பெய்து வரும் மழையால் 39 ஏரிகள் முழு அளவில் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து சில நாள்களாக பெய்து வரும் மழையால் கொசஸ்தலையாறு வடிநில பகுதிகளில் உள்ள 336 ஏரிகளில், 39 ஏரிகள் முழு அளவில் நிரம்பியுள்ளதாகவும் மற்றவைகளுக்கு நீர் வரத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாள்களாக விடாமல் பெய்து வருகிறது. இதில் செவ்வாய்க்கிழமை பகலில் விட்டு விட்டு பெய்த நிலையில், இரவு முதல் புதன்கிழமை காலை வரையில் விடாமல் அடைமழை பெய்து வருகிறது. இம்மழையால் கொசஸ்தலையாறு உப நீர் வடி நிலப்பகுதிகளில் உள்ள கால்வாய்களில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கொசஸ்தலையாறு உபநீர் வடி நிலப்பகுதியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 336 ஏரிகளில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
இந்த மழையால் அயத்தூர், நயபாக்கம், ரங்காபுரம், நெமிலி, கரம்பேடு உள்ளிட்ட 39 ஏரிகள் முழு அளவில் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. மேலும், 75 முதல் 90 சதவீதம் வரையில் 23 ஏரிகளும், 50 முதல் 75 சதவீதம் வரையில் 31 ஏரிகளும், 50 சதவீதம் 83 ஏரிகளும், 25 சதவீதம் 144 ஏரிகளுக்கும் நீர் வரத்து ஏற்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மழை அளவு விவரம்:
திருவள்ளூர் மாவட்டத்தில் புதன்கிழமை காலை நிலவரப்படி மி.மீட்டரில் பதிவான மழை அளவு விவரம். பூந்தமல்லி-37, திருவள்ளூர்-36, பொன்னேரி-34, திருவாலங்காடு-28, தாமரைபாக்கம்-22, சோழவரம்-19, பூண்டி-15, ஜமீன்கொரட்டூர்-15, செங்குன்றம்-12, கும்மிடிப்பூண்டி, திருத்தணி தலா-4, ஆர்.கே.பேட்டை-3 என 229 மி.மீட்டரும், சராசரியாக 16.35 மி.மீட்டரும் மழை அளவு பதிவாகியுள்ளது.