சீர்காழி அருகே குடிபோதையால் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து மனைவியை மிரட்டுவதற்காக மண்ணெண்ணெய் ஊற்றிய போது எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து படுகாயமடைந்த துப்புரவு தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருமுல்லைவாசல் அண்ணா நகரைச் சேர்ந்தவர் முருகேசன் (50). இவரும் இவரது மனைவி செங்கனியும் திருமுல்லைவாசல் ஊராட்சி மன்றத்தில் துப்புரவுத் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 22-ஆம் தேதி முருகேசன் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன் - மனைவியிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மனைவியை மிரட்டுவதற்காக முருகேசன் மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றயுள்ளார் அப்போது எதிர்பாராதவிதமாக அருகிலிருந்த கொசு பத்தியில் இருந்து தீ முருகேசனின் உடலில் மளமளவென பரவியுள்ளது.
இதில் படுகாயமடைந்த முருகேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை முருகேசன் உயிரிழந்தார். சம்பவம் குறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.