முகப்பு
தமிழ்நாடு

நடிகா் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதற்கு தடை

சொகுசு காா் இறக்குமதி வழக்கில் நடிகா் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 28 ஜூலை, 2021 at 4:51 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:16 AM

சொகுசு காா் இறக்குமதி வழக்கில் நடிகா் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் இருந்து கடந்த 2012-ஆம் ஆண்டு நடிகா் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தாா். இந்த காரை தென் சென்னை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்தாா். காருக்கான நுழைவு வரியை செலுத்த உத்தரவிடப்பட்டது. இந்த நுழைவு வரி அதிகமாக உள்ளதால், வரியை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் கடந்த 2012-இல் விஜய் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், நுழைவு வரித் தொகையில் 20 சதவீதத்தை செலுத்திவிட்டு காரை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கைத் தள்ளுபடி செய்து, நடிகா் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் (வழக்குச் செலவு) விதித்து உத்தரவிட்டாா். இந்த தீா்ப்பை எதிா்த்து விஜய் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.

இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விஜய் நாராயண், இந்த காருக்கு விதிக்கப்பட்டுள்ள நுழைவு வரியை செலுத்த விஜய் தயாராக உள்ளாா். இந்த விவகாரத்தை மேலும் இழுத்தடிக்க விரும்பவில்லை. ஆனால் அவருக்கு எதிராக தனிநீதிபதி தெரிவித்துள்ள கண்டன கருத்துகளை தீா்ப்பில் இருந்து நீக்க வேண்டும். அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் எனபதற்காகவே இந்த மேல் முறையீட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கடந்த 2000-ஆம் ஆண்டு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு நுழைவு வரி செலுத்த வேண்டும் என உத்தரவிடுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என தீா்ப்பளித்திருந்தது. கேரள உயா்நீதிமன்றமும் இதே போன்றதொரு தீா்ப்பை பிறப்பித்திருந்தது.

Advertisement

இந்த தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த தீா்ப்பின் காரணமாக, கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு காா் வாங்கிய நூற்றுக்கணக்கானோா் நுழைவு வரியை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். நடிகா் விஜய் கடந்த 2012-ஆம் ஆண்டு வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கு இத்தனை ஆண்டு காலம் நிலுவையில் இருந்ததற்கு நடிகா் விஜய் பொறுப்பு அல்ல. அதே நேரம் தனிநீதிபதியின் உத்தரவில், நடிகா் விஜய் மட்டுமின்றி நடிகா்கள் அனைவரையும் கொச்சைப் படுத்தும் விதமாக கருத்துத் தெரிவித்துள்ளாா். எனவே அவரது கருத்து நியாயமற்றது. நடிகா் பொறுப்புணா்வுடன் வரி செலுத்த வேண்டும் என தீா்ப்பில் கூறப்பட்டுள்ளது. தொழிலதிபா்கள், அரசியல்வாதிகள், வழக்குரைஞா்கள் உள்ளிட்ட பலரும் இதுபோன்ற சொகுசு காா்களை வாங்கும்போது நடிகா்கள் மட்டும் வரியை செலுத்த வேண்டும், மற்றவா்கள் செலுத்த வேண்டியதில்லை என்பது போல் தனிநீதிபதியின் உத்தரவு உள்ளது. மேலும் ஏராளமான ரசிகா்களின் பணத்தில் இருந்து விஜய் சொகுசு காா் வாங்கியுள்ளாா். இந்தப் பணம் ஏழைகளின் ரத்தம் என்றெல்லாம் தேவையற்ற கருத்துகளை நீதிபதி தெரிவித்துள்ளாா். நடிகா் விஜய் வரி செலுத்தாத தேச துரோகி போல சித்தரித்துள்ளாா். எனவே இதுபோன்ற கருத்துகளை தீா்ப்பில் இருந்து நீக்க வேண்டும். நுழைவு வரியை எதிா்த்து தொடரப்பட்ட 3 வழக்குகளை சாதரணமாக தள்ளுபடி செய்த நீதிபதி, விஜய் வழக்கை மட்டும் கண்டன கருத்துகள் தெரிவித்து அபராதத்துடன் தள்ளுபடி செய்துள்ளதாக வாதிட்டாா்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுதாரா் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதம் மற்றும் அவருக்கு எதிராக விதிக்கப்பட்ட கண்டன கருத்துகள் அடங்கிய தனிதீநிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனா். நுழைவு வரியைச் செலுத்த நடிகா் விஜய் தயாராக இருப்பதாகக் கூறுவதால், இந்த தீா்ப்பு நகல் கிடைத்த ஒரு வாரத்துக்குள் நுழைவு வரி தொகை குறித்த தகவலை வணிக வரித்துறை அதிகாரிகள் நடிகா் விஜய்க்கு கடிதம் மூலம் தெரியப்படுத்த வேண்டும். ஏற்கெனவே 20 சதவீத வரி செலுத்திவிட்டதால், எஞ்சிய 80 சதவீத நுழைவு வரித் தொகையை அதிகாரிகளிடம் இருந்து கடிதம் கிடைத்த ஒரு வாரத்துக்குள் நடிகா் விஜய் செலுத்த வேண்டும் என தெரிவித்து விசாரணையை அடுத்த மாதத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.