முகப்பு
தமிழ்நாடு

மீனவர் ராஜ்கிரணின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு மறுகூராய்வு

இலங்கை கடற்படைப் படகு மோதி உயிரிழந்த மீனவர் ராஜ்கிரணின் உடல் நீதிமன்ற உத்தரவின்படி தோண்டி எடுக்கப்பட்டு வியாழக்கிழமை மறுகூராய்வு செய்யப்பட்டது.

Updated On : 18 நவம்பர் 2021, 4:52 pm IST
மீனவர் ராஜ்கிரணின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு மறுகூராய்வு
பகிர்:

இலங்கை கடற்படைப் படகு மோதி உயிரிழந்த மீனவர் ராஜ்கிரணின் உடல் நீதிமன்ற உத்தரவின்படி தோண்டி எடுக்கப்பட்டு வியாழக்கிழமை மறுகூராய்வு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆர். ராஜ்கிரண் (30), எஸ். சுகந்தன் (30), ஏ. சேவியர் (32) ஆகியோர் அக்.19ஆம் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் தங்களது ரோந்து படகு மூலம் இடித்தனர்.

அதில், மீனவர்களின் படகு கடலில் மூழ்கியது. சுகந்தன், சேவியர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இரு நாட்களுக்குப் பிறகு ராஜ்கிரண் சடலமாக மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து, அக்.23ஆம் தேதி இலங்கையில் இருந்து ராஜ்கிரணின் உடல் கடல் வழியாக கொண்டுவரப்பட்டு கோட்டைப்பட்டினத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், ராஜ்கிரணின் உடலில் காயம் இருப்பதால் இலங்கை கடற்படை அவரை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும்,  அதனால் உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் மறுஉடற்கூராய்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி நவ.3ஆம் தேதி புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமுவிடம், ராஜ்கிரணின் மனைவி பிருந்தா உள்ளிட்டோர் மனு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் பிருந்தா மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மீனவர் ராஜ்கிரணின் உடலைத் தோண்டி எடுத்து மறுகூராய்வு செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

அந்த உத்தரவின்படி மணமேல்குடி வட்டாட்சியர் ராஜா முன்னிலையில் வியாழக்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டி எடுக்கப்பட்ட சடலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இங்கு தடயவியல் துறை மருத்துவர்கள் தமிழ்மணி, சரவணன் ஆகியோர் மறு உடற்கூராய்வை மேற்கொண்டர்.

சுமார் இரண்டு மணிநேரத்தில் உடல் மீண்டும் வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு கோட்டைப்பட்டினம் கொண்டு செல்லப்பட்டு அதே இடத்தில் புதைக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவின்படி உடற்கூராய்வு அறிக்கை வரும் 24ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.