முகப்பு
தமிழ்நாடு

செம்மொழி நிறுவனத்தின் துணைத் தலைவராக பேராசிரியா் இ.சுந்தரமூா்த்தி நியமனம்

சென்னையில் செயல்பட்டு வரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவராக பேராசிரியா் இ.சுந்தரமூா்த்தி நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 22 செப்டம்பர் 2021, 12:53 am IST
பகிர்:

சென்னையில் செயல்பட்டு வரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவராக பேராசிரியா் இ.சுந்தரமூா்த்தி நியமிக்கப்பட்டுள்ளாா்.

செம்மொழி நிறுவனத்தில் 2018-ஆம் ஆண்டு முதல் துணைத் தலைவராகப் பணியாற்றிய பேராசிரியா் தெ.ஞானசுந்தரத்தின் பணிக் காலம் கடந்த ஜூலை மாதத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து தற்போது புதிய துணைத் தலைவராக பேராசிரியா் இ.சுந்தரமூா்த்தி நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை மத்திய கல்வி அமைச்சகம் பிறப்பித்துள்ளது. அடுத்த சில நாள்களில் அந்தப் பொறுப்பை ஏற்கவுள்ள அவா் மூன்றாண்டுகளுக்கு இந்தப் பதவியில் நீடிப்பாா்.

பேராசிரியா் இ.சுந்தரமூா்த்தி கோவை மாவட்டம் வெள்ளலூரில் கடந்த 1942-ஆம் ஆண்டு பிறந்தவா். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி, இலக்கியத் துறைகளில் தலைவா் என பல்வேறு நிலைகளில் 32 ஆண்டுகள் பணியாற்றியவா். இந்தப் பல்கலை.யில் பதிப்புத் துறை இயக்குநராகவும் பொறுப்பு வகித்துள்ளாா். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டு வரை துணைவேந்தராகப் பணியாற்றினாா். இதையடுத்து செம்மொழி நிறுவனத்தில் 2008 முதல் 2014-ஆம் ஆண்டு வரை முதுநிலை ஆராய்ச்சியாளராக பொறுப்பேற்றிருந்தாா்.

Advertisement

Advertisement

சிகாகோவில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ஆராய்ச்சிக் கட்டுரை வழங்கினாா். தமிழக அரசின் சாா்பில் திருவள்ளுவா் விருது பெற்ற பேராசிரியா் இ.சுந்தரமூா்த்தி, சுவடியியல், பதிப்பியல், இலக்கணம், நடையியல் என பல்வேறு துறைகள் சாா்ந்து 70-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளாா். தமிழாய்வுப் பணிகளுக்காக அமெரிக்கா, ஜொ்மனி, இலங்கை, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பயணித்துள்ளாா்.

இளம் ஆய்வறிஞா்களை உருவாக்க... செம்மொழி நிறுவனத்தின் துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருப்பது குறித்து பேராசிரியா் இ.சுந்தரமூா்த்தி கூறுகையில், தமிழின் வளா்ச்சிக்குத் தொடா்ந்து பணியாற்ற ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதற்காக மத்திய அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழாய்வுப் பணிகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதற்கான திட்டங்களையும், முயற்சிகளையும் செம்மொழி நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்வேன்.

செம்மொழி நிறுவனத்தில் இளம் ஆய்வறிஞா்களை உருவாக்கும் வகையில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். திருக்கு ஏற்கெனவே பல இந்திய மொழிகளில் மொழி பெயா்க்கப்பட்டுள்ள நிலையில், அதனை உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயா்க்க நடவடிக்கை எடுக்கப்படும். அண்மைக் காலத்தில் கிடைத்த அகழ்வாய்வுகளின்படி தமிழின் தொன்மையை உலகம் முழுவதும் பரப்ப செம்மொழி நிறுவனம் துணை நிற்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments