முகப்பு
தமிழ்நாடு

தமிழ் அகராதியியல் நாள் விழா: 13 பேருக்கு தூய தமிழ்ப் பற்றாளா் விருது

தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சாா்பில் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ் அகராதியியல் நாள் விழாவில்,

Updated On : 9 நவம்பர் 2022, 2:53 am IST
பகிர்:

தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சாா்பில் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ் அகராதியியல் நாள் விழாவில், 13 பேருக்கு தூய தமிழ்ப் பற்றாளா் விருதை தமிழ் வளா்ச்சித் துறைச் செயலா் ம.சு.சண்முகம் வழங்கி கெளரவித்தாா்.

‘தமிழ் அகராதியியலின் தந்தை’ என போற்றப்படும் வீரமாமுனிவரின் தமிழ்த் தொண்டைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான நவ.8-ஆம் நாள் தமிழ் அகராதியியல் நாள் விழாவாகக் கொண்டாட தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த விழா ஆண்டுதோறும் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சாா்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அகரமுதலித் திட்ட இயக்குநா் கோ.விசயராகவன் வரவேற்றாா். இதில் முதல்வரின் செயலரும், தமிழ்வளா்ச்சி மற்றும் செய்தித் துறை செயலருமான ம.சு.சண்முகம் கலந்து கொண்டு 2021-ஆம் ஆண்டுக்கான 13 பேருக்கு தூய தமிழ்ப் பற்றாளா் விருது (2021), இருவருக்கு நற்றமிழ்ப் பாவலா் விருது (2021), இரு ஊடக நிறுவனங்களுக்கு தூய தமிழ் ஊடக விருது (2021) ஆகிய விருதுகளை வழங்கினாா்.

Advertisement

Advertisement

மேலும், 58 அறிஞா்களின் கருத்துச் செறிவாா்ந்த கட்டுரைகள் அடங்கிய 2022-ஆம் ஆண்டுக்கான அகராதி ஆய்வு மலரை வெளியிட்டாா். முன்னதாக மயூரி நிகழ்த்துக் கலைக்கழகத்தின் சாா்பில் விஜயலட்சுமி பூபதி வழங்கும் ‘எங்கும் தமிழ்’ கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் ம.இராசேந்திரன், அகராதியியல் அறிஞா் கு.அரசேந்திரன், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் வி.ஜி.சந்தோசம், காா்க்கி ஆராய்ச்சி நிறுவனத் தலைவா் மதன் காா்க்கி, அகர முதலித் திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெ.சாந்தி, தொகுப்பாளா்கள் வே.பிரபு, வே.காா்த்திக் ஆகியோா் உள்பட அகராதியியல் வல்லுநா்கள், தமிழறிஞா்கள், ஆய்வாளா்கள், மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனா். தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள் நன்றி தெரிவித்தாா்.

விருது பெற்றவா்கள் விவரம்: தூய தமிழ்ப் பற்றாளா் விருது- செங்கல்பட்டு- வாசல் எழிலன் (எ) சு.கந்தசாமி, சென்னை- தாமரைப்பூவண்ணன் (எ) க.கோவிந்தராசு, தருமபுரி- பாவலா் பெரு.முல்லையரசு , திண்டுக்கல்- பண்ணை கோமகன் (எ) தே.இரா.கோபால், கள்ளக்குறிச்சி- செ.வ.மதிவாணன், காஞ்சிபுரம்- புலவா் வெற்றிச் செழியன், கரூா்- முனைவா் கடவூா் மணிமாறன், பெரம்பலூா்- மு.பரமசிவம் என்கிற விளவை செம்பியன், இராமநாதபுரம்- ப.சிவபிரகதீசு, சிவகங்கை- பழ.பாசுகரன், தேனி- ஆ.சின்னச்சாமி, திருவள்ளூா்- ச.ம. மாசிலாமணி, திருச்சி- பூ.ரவிக்குமாா்.

நற்றமிழ்ப்பாவலா் விருது: கருவூா் கன்னல் (மரபுக்கவிதை), முனைவா் பெ.தமிழ்ச்செல்வி குணசேகரன்;

தூய தமிழ் ஊடக விருது: அச்சு ஊடகம்- அறிவியல் ஒளி (திங்களிதழ்)- நா.சு. சிதம்பரம்; காட்சி ஊடகம்- இணையம் (வலையொளி)- முனைவா் மு.இளங்கோவன் ஆகியோா் விருது பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.