அம்பாசமுத்திரம் அருகே மின்சாரம் பாய்ந்து யானை பலி!
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வந்த காட்டு யானை மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தது.
அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வந்த காட்டு யானை மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தது.
திருநெல்வேலி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதியில் அமைந்துள்ளது களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. மலையடிவார கிராமங்களான பொட்டல், மணிமுத்தாறு, செட்டிமேடு, வேம்பையாபுரம், பொதிகையடி, அனவன்குடியிருப்பு, பெத்தான் பிள்ளைக் குடியிருப்பு, சிவசைலம், அழகப்பபுரம், கடையம் பெரும்பத்து, திரவிய நகர், மத்தளம்பாறை உள்ளிட்ட மலையடிவார கிராம விவசாய நிலங்களில் உணவுக்காக வனப்பகுதியிலிருந்து வெளியேறும் விலங்குகள் விளைபயிர்களை சேதப்படுத்தி வருவதுண்டு.
பொட்டல் கிராமம் அருகே தனியார் தோட்டத்தில் நுழைந்து அங்கிருந்த பனைமரத்தைச் சாய்த்ததில் உயரழுத்த மின்கம்பி அறுந்து யானையின் மேல் விழுந்து மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்த யானை பார்வையிடும் வனத்துறை அதிகாரிகள்.
Advertisement
Advertisement
மேலும், மழைக்காலங்களில் காட்டுக் கொசுக்களின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காகவும் யானை, காட்டுமாடுகள் உள்ளிட்ட விலங்குகள் மலையடிவார கிராமங்களில் நுழைவதுண்டு.
இதனிடையே, திங்கள்கிழமை அதிகாலை அம்பாசமுத்திரம் வனச்சரகம், சிங்கம்பட்டி பீட்-2. பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் யானை, பொட்டல் கிராமம் அருகே தனியார் தோட்டத்தில் நுழைந்து அங்கிருந்த பனைமரத்தைச் சாய்த்துள்ளது. இதில் அருகில் சென்ற உயரழுத்த மின்தடத்தில் பனைமரம் விழுந்ததில் மின்கம்பி அறுந்து யானையின் மேல் விழுந்து மின்சாரம் பாய்ந்ததில் அந்த இடத்திலேயே யானை உயிரிழந்தது.
அம்பாசமுத்திரம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் யானை உயிரிழந்ததை நேரில் பார்வையிட்ட அம்பாசமுத்திரம் கோட்டத் துணை இயக்குநர் செண்பகப்ரியா.
தகவலறிந்த களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத் துணை இயக்குநர் செண்பகப்ரியா, அம்பாசமுத்திரம் உதவி வனப்பாதுகாவலர் (பயிற்சி) நித்யா, அம்பாசமுத்திரம் காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும், உயிரிழந்த யானையை உடற்கூறு செய்து அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் செய்து வருகின்றனர்.