தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அலுவலர்கள்: காவல்துறையில் புகார்
குடியரசு நாள் விழாவின்போது தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
குடியரசு நாள் விழாவின்போது தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நேற்று குடியரசு நாள் விழா நடைபெற்றது. விழாவின்போது, தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுக்கு ரிசர்வ் வங்கியில் சில அதிகாரிகள் எழுந்து நிற்கவில்லை என வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க தேவையில்லை என நீதிமன்ற ஆணை இருப்பதாக ரிசர்வ் வங்கி அலுவலர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, தமிழக அரசாணையின்படி எழுந்து நிற்க வேண்டும் என சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
இதற்கிடையே, ரிசர்வ் வங்கி அலுவலர்களின் செயலுக்கு எதிராக திராவிடர் கழகம் போராட்டம் நடத்திய நிலையில், பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் தமிழக அரசாணையை அவமதித்த ரிசர்வ் வங்கி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல்துறையிடம் இணையவழி புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சென்னை காவல்துறையினர் விடியோ ஆதாரங்களை கைப்பற்றி விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.