முகப்பு
தமிழ்நாடு

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்: 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் - மா. சுப்பிரமணியன்

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று கூறியிருக்கிறார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

Updated On : 15 நவம்பர், 2022 at 2:50 PM
கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்: 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் - மா. சுப்பிரமணியன்
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:21 PM


சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று கூறியிருக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்த விவகாரத்தில், கவனக்குறைவாக நடந்து கொண்டதாக புகாரின் பேரில் 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்ட நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீராங்கனை பிரியா(17) இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை, வியாசா்பாடியை சோ்ந்தவா் ரவிக்குமாா். அவரது மகள் பிரியா (17) சென்னை ராணிமேரி கல்லூரியில் விளையாட்டுப் பிரிவில் படித்து வந்தார். மேலும், கால்பந்து போட்டியில், மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றவர்.

பிரியா மரணம் குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், மூட்டு அறுவை சிகிச்சை நடந்த போது போடப்பட்ட கட்டு காரணமாக பிரியாவின் உடலில் ரத்த ஓட்டம் தடைபட்டது. மருத்துவர்களின் கவனக்குறைவே பிரியாவின் மரணத்துக்குக் காரணம் என்று தெரிய வந்துள்ளது. கவனக்குறைவாக இருந்த 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும். பிரியாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு. கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பாக ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.