முகப்பு
தமிழ்நாடு

ஆத்தூர் அருகே ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்து:  6 பேர் பலி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஆம்னி பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:21 AM
பகிர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஆம்னி பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஏழு பேர், சென்னைக்கு செல்வதற்காக, நள்ளிரவு 12 மணியளவில் பேருந்து நிலையம் அருகில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது, சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரவிந்த் என்ற தனியார் ஆம்னி பேருந்து வந்தவுடன் அந்த பேருந்தை நிறுத்தி, பின்பகுதியில் லக்கேஜ் பொருள்களை வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது சேலத்தில்  இருந்து, ஆத்தூர் நோக்கி வந்த டாரஸ் லாரி, பேருந்தின் பின்னால் இருந்த ஏழு பேர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்து நடந்த பெத்தநாயக்கன்பாளையம் பேருந்து நிலையம் பகுதி

இந்த விபத்தில் பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த  திருநாவுக்கரசு (65), அவரது மகன் ரவிக்குமார்(42), செந்தில்வேலன்(44), சுப்பிரமணி மற்றும் ஆம்னி பேருந்தின் கிளீனர் தீபன் உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் படுகாயம் அடைந்த திருநாவுகரசுவின் மனைவி விஜயா (60) ஆத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது விஜயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் காரணமாக விபத்தில் உயிரிழந்த எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

மேலும், இதே விபத்தில் பலத்த காயம் அடைந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.