பாரா விளையாட்டுப் போட்டிகளில் பார்வையற்றோருக்கான பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற மாற்றுத்திறனாளி வீராங்கனைக்கு அரசுப்பணிக்கான ஆணையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, வரகுபாடி கிராமத்தைச் சார்ந்தவர் செல்வி பாப்பாத்தி. பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. இவர் மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பாரா விளையாட்டுப் போட்டிகளில் பார்வையற்றோருக்கான பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.
பாப்பாத்தி இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது குடும்பம் மிகவும் வறுமை நிலையில் இருப்பதாகவும், தான் முதுநிலை பட்ட மேற்படிப்பு படித்துள்ளதாகவும் தெரிவித்து தனது குடும்ப நிலையைக் கருத்திற்கொண்டு தனக்கு ஏதாவது வேலைவாய்ப்பு வழங்கிடுமாறு கோரிக்கை வைத்தார்.
பாப்பாத்தியின் கோரிக்கையை கேட்டறிந்த அமைச்சர், அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வெளிமுகமை மூலம் அலுவலக உதவியாளராகப் பணி நியமனம் வழங்கிட ஆணையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, இன்று (10.05.2023) தலைமைச் செயலகத்தில் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாப்பாத்திக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வெளிமுகமை மூலம் அலுவலக உதவியாளராகப் பணிபுரிவதற்கான ஆணையினை வழங்கினார்.
அப்போது இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாதரெட்டி, இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.