முகப்பு
தமிழ்நாடு

சனாதன விவகாரம்: கோவையில் திமுக - பாஜக போஸ்டர் சண்டை!

கோவையின் முக்கியப் பகுதிகளில் சனாதன விவகாரம் குறித்த போஸ்டர்களை திமுக மற்றும் பாஜகவினர் ஒட்டியுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:11 PM
பகிர்:

கோவை: கோவையின் முக்கியப் பகுதிகளில் சனாதன விவகாரம் குறித்த போஸ்டர்களை திமுக மற்றும் பாஜகவினர் ஒட்டியுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.

தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், கடந்த இரு நாள்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசினார். அதற்கு பல்வேறு ஹிந்து அமைப்புகள், பாஜகவினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே அயோத்தியை சேர்ந்த சாமியார் ஒருவர், உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்ததோடு அவரை கொல்ல வேண்டும் எனவும் உதயநிதி ஸ்டாலினின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்படும் எனவும் பேசிய விடியோ காட்சிகள் வைரலானது.

இந்த நிலையில், கொலைவெறியை தூண்டும் விதமாக அந்த சாமியார் பேசி இருப்பதால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக உட்பட பல்வேறு திராவிட இயக்கங்கள் அந்ததந்த மாவட்டங்களில் உள்ள மாநகர காவல் ஆணையாளர் அலுவலகங்களில் புகார் மனு அளித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் சாமியாருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

அதேபோல், பல்வேறு மாநிலங்களில் உதயநிதிக்கு எதிராக ஹிந்து அமைப்புகள் புகார் அளித்து வருவதால் இந்தியா முழுவதும் "சனாதனம்" என்ற வார்த்தை பேசு பொருளாகி உள்ளது.

இந்த நிலையில் கோவை மாநகர் மாவட்ட திமுக மற்றும் பாஜகவினர் சனாதானம் குறித்தான போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

திமுக சார்பில் "போலிச்சாமியாரே! 100 கோடி தர்ரோம் தொடுடா பார்க்கலாம்" என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பாஜக தரப்பில் "சனாதனம் எங்கள் உயிர் மூச்சு" என்ற வாசகங்களுடன் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

இந்த போஸ்டர்கள் மாநகரின் முக்கியப் பகுதிகளான டவுன்ஹால், லங்கா கார்னர், ரயில் நிலையம் அருகில் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.