முகப்பு
தமிழ்நாடு

ஜன. 12 -க்குள் பொங்கல் தொகுப்பு வழங்க நடவடிக்கை: அமைச்சர் சக்கரபாணி

பொங்கல் பரிசுத் தொகுப்பு வருகிற ஜனவரி 12 ஆம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். 

Updated On : 3 ஜனவரி 2023, 11:59 am IST
அமைச்சர் சக்கரபாணி
பகிர்:

பொங்கல் பரிசுத் தொகுப்பு வருகிற ஜனவரி 12 ஆம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். 

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முழு நீள கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்பட உள்ளது. 2.19 கோடி குடும்ப அட்டைதாரா்கள் இதன்மூலம் பயன்பெறவுள்ளனா்.

அதன்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன்களை வீடு வீடாகச் சென்று விநியோகிக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது. ஜனவரி 8-ஆம் தேதி வரை டோக்கன் வழங்கும் பணி நடைபெறும் என்றும் ஜன. 9-ல் பொங்கல் தொகுப்பு வழங்குவதை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். 

Advertisement

Advertisement

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, 

பொங்கல் பரிசுத் தொகுப்புக்குத் தேவையான 60% பொருள்கள் நியாயவிலைக் கடைகளுக்கு வந்துவிட்டன. இன்னும் ஓரிரு தினங்களில் அனைத்துப் பொருள்களும் சென்றுவிடும். பொங்கல் பரிசுத் தொகுப்பில் அனைத்து பொருள்களும் தரமானதாக இருக்கும். 

கடந்த ஆண்டு திமுக அரசு வழங்கிய 21 வகையான மளிகைப் பொருள்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இரு இடங்களில் புகார் வந்தது. அதுவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். 

இந்த ஆண்டு  ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முழு நீள கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்பட உள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தொகுப்பில் கரும்பும் சேர்க்கப்பட்டுள்ளது. 

ஜனவரி 9 அன்று பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது தொடங்கி ஜனவரி 12 ஆம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனினும், விட்டுப்போனவர்களுக்கு கொடுப்பதற்காக ஜனவரி 13 ஆம் தேதி நியாயவிலைக்கடைகள் திறந்திருக்கும். 

கரும்பு கொள்முதல் செய்ய அதிகாரிகள் குழு மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.