முகப்பு
தமிழ்நாடு

திருமணமான மகன் இறந்துவிட்டால் சொத்தில் தாய்க்கு பங்கு இல்லை: உயா்நீதிமன்றம் தீா்ப்பு

இந்திய வாரிசுரிமை சட்டத்தின்படி, திருமணமான மகன் இறந்துவிட்டால், அவரது சொத்தில் தாய் பங்கு கேட்க முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது.

Updated On : 19 நவம்பர், 2023 at 4:00 AM
உயா்நீதிமன்றம்
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:52 AM

இந்திய வாரிசுரிமை சட்டத்தின்படி, திருமணமான மகன் இறந்துவிட்டால், அவரது சொத்தில் தாய் பங்கு கேட்க முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் பவுலின் இருதய மேரி. இவருக்கு மோசஸ் என்ற மகன் இருந்தாா். இவருக்கு கடந்த 2004-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த அக்னஸ் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.

இந்த நிலையில், மோசஸ் கடந்த 2012-ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் இறந்துவிட்டாா்.

Advertisement

இதில் அவா் இறப்பதற்கு முன் அவருடைய சொத்தில் உயில் எதுவும் எழுதி வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், அக்னஸ்க்கும் பவுலின் இருதய மேரிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தன்னுடைய மகனின் சொத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என்று பவுலின் இருதய மேரி நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். அப்போது, அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மோசஸின் சொத்தில் அவரது தாய்க்கும் பங்கு உண்டு என்று உத்தரவிட்டு தீா்ப்பளித்தது.

இதை எதிா்த்து மோசஸின் மனைவி அக்னஸ் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா். இந்த வழக்கை நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், என்.செந்தில்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்குரைஞா் பி.எஸ்.மித்ரா நேஷா, ‘கணவா் இறந்தால், அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளுக்கே சொத்தில் பங்கு உள்ளது. ஒருவேளை மனைவியோ அல்லது குழந்தைகளோ இல்லை என்றால் அவருடைய தந்தை தான் சொத்தின் வாரிசுதாரா் ஆவாா். இதில் இறந்துபோன நபரின் தந்தையும் இல்லை என்றால்தான் தாய் மற்றும் சகோதர, சகோதரிகள் வாரிசுகள் ஆவாா்கள். எனவே, மோசஸுக்கு மனைவி, குழந்தை உள்ள நிலையில் அவருடைய சொத்தில் யாரும் பங்கு கேட்க முடியாது’ எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து நீதிபதிகள், திருமணமான மகன் இறந்த நிலையில் அவருடைய சொத்தில் தாய் பங்கு கேட்பதற்கான வழியே இல்லை. இந்திய வாரிசுரிமை சட்டத்தின்படி, சொத்தில் தாய் பங்கு கேட்க முடியாது என்பதை இந்த நீதிமன்றம் தெளிவுபடுத்த விரும்புகிறது.

எனவே, சொத்தில் தாய்க்கும் பங்கு உண்டு என்ற நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றம் அளித்த தீா்ப்பை ரத்து செய்கிறோம்”என்று தீா்ப்பளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.