தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1038 ஆவது சதய விழா
தஞ்சாவூர் பெரியகோயிலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1038 -ஆவது சதய விழா அக்டோபர் 24 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதை முன்னிட்டு, பந்தல் கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோயிலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1038 -ஆவது சதய விழா அக்டோபர் 24 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதை முன்னிட்டு, பந்தல் கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
பார் போற்றும் புகழுடைய இந்தப் பெரியகோயிலைக் கட்டி தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அவர் பிறந்த விண்மீனாகிய ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இரண்டு நாள்கள் சிறப்பாக விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி, நிகழாண்டு மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 -ஆவது சதய விழா அக்டோபர் 24 -ஆம் தேதி தொடங்குகிறது. சதய நட்சத்திர நாளான 25 -ஆம் தேதி ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
Advertisement
கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தபடி, இந்த விழா அரசு விழாவாக நடைபெற உள்ளது.
இதையும் படிக்க | காவிரி விவகாரம்: தஞ்சையில் முழு அடைப்புப் போராட்டம்
இந்த இரு நாள் விழாவில் பட்டிமன்றம், நாட்டிய நாடகம், திருமுறை அரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம், நாட்டிய நிகழ்ச்சி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும், பெருவுடையார், பெரியநாயகிக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறவுள்ளன.
இதையொட்டி, பெரியகோயிலில் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை(அக்.11) காலை நடைபெற்றது. முன்னதாக, பந்தக் காலுக்கு மஞ்சள், சந்தனம், பால் உள்ளிட்ட பொருள்களால் பல்வேறு பூஜைகளும், தீபாராதனையும் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சதய விழாக் குழுத் தலைவர் து. செல்வம், துணைத் தலைவர் எஸ்.சி. மேத்தா, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, அறநிலையத்துறை இணை ஆணையர் சு. ஞானசேகரன், உதவி ஆணையர் கோ. கவிதா, கோயில் செயல் அலுவலர் ப. மாதவன், நகை சரிபார்ப்பு அலுவலர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.