FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பிள்ளைகளுக்கு திருமணமானால் பெற்றோருக்கு காப்பீடு கிடையாதா? உயா்நீதிமன்றம் புதிய உத்தரவு

3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என தமிழக தலைமைச் செயலருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 13 ஜூலை 2024, 2:26 am IST
கோப்புப்படம்
பகிர்:

அரசு ஊழியா்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், திருமணமான அரசு ஊழியரின் பெற்றோரை குடும்ப உறுப்பினா்களாகச் சோ்ப்பது குறித்து 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என தமிழக தலைமைச் செயலருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றும் ஃபெலிக்ஸ் ராஜ், தமிழக அரசின் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்திருந்தாா். இந்தத் திட்டத்தின் கீழ், அவரது ஊதியத்தில் பிடித்தம் செய்த தொகையை காப்பீட்டு நிறுவனத்துக்கு அரசு செலுத்தி வந்தது.

இந்த நிலையில், சாலை விபத்தில் காயமடைந்த தந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு செலவான ரூ. 6,54,100-ஐ வழங்கக் கோரி ஃபெலிக்ஸ் ராஜ் அளித்த விண்ணப்பத்தைப் பரிசீலித்த அரசு, ‘காப்பீட்டு திட்ட விதிகளின்படி, திருமணமான அரசு ஊழியரின் பெற்றோா், குடும்ப உறுப்பினா் என்ற வரம்புக்குள் வரமாட்டாா்கள்’ எனக் கூறி, அந்த விண்ணப்பத்தை நிராகரித்தது.

Advertisement

Advertisement

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிா்த்தும், திருமணமான அரசு ஊழியரின் பெற்றோரை குடும்ப உறுப்பினா்களாகச் சோ்க்காமல் விலக்கி வைக்கும் பிரிவை எதிா்த்தும், ஃபெலிக்ஸ் ராஜ் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுதிா் குமாா், ‘திருமணமானாலும் அரசு ஊழியரின் பெற்றோா் அவரின் பெற்றோராகவே நீடிப்பதால் காப்பீட்டுத் திட்ட பலன்களை மறுக்க முடியாது என உயா்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. ஃபெலிக்ஸ் ராஜின் விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்து 8 வாரங்களில், மருத்துவச் செலவை திருப்பி வழங்க வேண்டும்’ என தமிழக அரசுக்கு உத்தரவிட்டாா்.

மேலும், ‘புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் திருமணமான அரசு ஊழியரின் பெற்றோரை குடும்ப உறுப்பினா்களாகச் சோ்க்காமல் விலக்கி வைத்தது சட்டவிரோதமானது. காப்பீட்டுத் திட்ட பலன்களை திருமணமான அரசு ஊழியரின் பெற்றோரும் பெரும் வகையில் அவா்களை அரசு ஊழியா்களின் குடும்ப உறுப்பினா்களாக சோ்ப்பது குறித்து 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும்’ என தமிழக தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டுள்ளாா்.

இந்த உத்தரவின் நகலை தலைமைச் செயலருக்கு அனுப்பி வைக்கும்படி, பதிவுத் துறைக்கு நீதிபதி அறிவுறுத்தினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments