தேர்தல் முடிவு: நாம் தமிழரை பாராட்டிய அண்ணாமலை!
6% வாக்குகளை இழந்துள்ள நிலையில் வெற்றியை கொண்டாடுகிறது திமுக என்றார் அண்ணாமலை.
தமிழகத்தில் பாஜகவுக்கு வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (ஜூன் 5) தெரிவித்தார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பிறகு சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் பெரிய வெற்றியை பெற்றுள்ள இந்தியா கூட்டணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
தென்மாவட்டங்களில் பாஜகவுக்கு வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. பாஜகவுக்கு வாக்கு சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் வெற்றி பெற முடியவில்லை.
பாஜக என்று ஒரு கட்சி உள்ளதா? என்று கேட்டோருக்கு வாக்கு சதவிதத்தை அதிகரித்துக் காட்டி பதிலடி கொடுத்துள்ளோம்.
6% வாக்குகளை இழந்துள்ள நிலையில் வெற்றியை கொண்டாடுகிறது திமுக. அதிமுகவின் கோட்டையாக இருந்த கோவையில் அதிக வாக்குகள் பெற்று பாஜக 2ஆம் இடம் பிடித்துள்ளது.
3ஆம் இடத்துக்கு அதிமுக சென்றதற்கு அதன் தலைவர்களுக்கு நாவடக்கம் தேவை என்பதைக் காட்டுகிறது
அரசியல் சித்தாந்த மாறுபாடு இருந்தாலும் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை பாராட்டுகிறேன். கோவை மக்களவைத் தொகுதியில் பணம் கொடுக்காமல் 4 லட்சம் வாக்குகள் எனக்கு கிடைத்துள்ளன எனப் பேசினார் அண்ணாமலை.