கூலித் தொழிலாளி இறுதிச் சடங்கில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள்!
கள்ளச்சாராயம் குடித்து பலியான கூலித் தொழிலாளி இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்கள் கள்ளச்சாராயம் குடித்து..
கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் குடித்து பலியான கூலித் தொழிலாளியின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் குடித்ததில் 35 பேர் பலியான சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தையே உலுக்கியிருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் குடித்ததில், 35 பேர் பலியாகினர், 70க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே நாளில் இத்தனை பேர் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், கருணாபுரத்தில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் குடித்த கூலித் தொழிலாளி ஒருவர் இறந்துவிட, அவரது இறுதிச் சடங்கில் சுமார் 500 பேர் பங்கேற்றுள்ளனர். இவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் விற்பனையான கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்துள்ளனர்.
இறுதிச் சடங்கு முடிந்து வீடு திரும்பியவர்களுக்கு பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சிலர் அன்று இரவே மருத்துவமனைகளுக்குச் சென்றுள்ளனர். அதிகாலையிலேயே சிலர் வீட்டிலும் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட 120 பேர் வாந்தி, மயக்கம், தலைவலி,நெஞ்சுவலி, கண்பார்வை தெரியாமல் போனது என பல்வேறு பிரச்னைகளுடன் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், ஜிப்மர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இவர்களில் இதுவரை 37 பேர் உயிரிழந்தனர். 70க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக விசாரணை அதிகாரி கோமதி தலைமையில், சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ரு.ஆனந்தன் வழக்குப் பதிவு செய்து, கள்ளச்சாராய வியாபாரிகள் கன்னுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, தாமோதரன் ஆகியோரை கைது செய்தனர்.