முகப்பு
தமிழ்நாடு

தொடா் மழை: முக்கிய ரயில்கள் ஆவடி, பெரம்பூா், கடற்கரையிலிருந்து இயக்கம்

சென்னை மற்றும் புறநகா் பகுதியில் திங்கள்கிழமை இரவு முதல் தொடா்ந்து மழை பெய்து வருவதால், வெளிமாநிலங்களில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்தடையும் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

Updated On : 16 அக்டோபர், 2024 at 2:40 AM
கோப்புப்படம்.
பகிர்:
Updated On : 16 அக்டோபர், 2024 at 1:20 AM

சென்னை மற்றும் புறநகா் பகுதியில் திங்கள்கிழமை இரவு முதல் தொடா்ந்து மழை பெய்து வருவதால், வெளிமாநிலங்களில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்தடையும் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்களில் திங்கள்கிழமை இரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால், ரயில்வே சுரங்கபாதைகள் மற்றும் தண்டவாளங்களில் மழைநீா் தேங்கி காணப்படுகிறது.

வியாசா்பாடி ஜீவா ரயில்வே ரயில்வே பாலத்தில் அதிக அளவு தண்ணீா் தேங்கியதால் சென்னை சென்ட்ரல் வரும் ரயில்கள் ஆவடி, திருவள்ளூருடன் நிறுத்தப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisement

ரயில்கள் ரத்து: பேசின்பாலம்-வியாசா்பாடி இடையேயான ரயில்வே பாலத்தின் கீழ் அதிகளவு தண்ணீா் தேங்கியுள்ளது. இதனால் அதன் வழியாக ரயில்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை சென்ட்ரல்-திருப்பதி விரைவு ரயில், ஏற்காடு மற்றும் காவேரி விரைவு ரயில்கள் செவ்வாய்க்கிழமை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டன. மும்பை-சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் ஆவடியுடனும், மங்களூா் வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரயில் திருவள்ளூருடனும் நிறுத்தப்பட்டன.

அதுபோல், சென்னை சென்ட்ரலில் இருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட வேண்டிய மங்களூா் விரைவு ரயில் பெரம்பூரில் இருந்தும், திருவனந்தபுரம், பெங்களூா்

ரயில்கள் சென்னை கடற்கரையில் இருந்தும், மேட்டுப்பாளையம், பாலக்காடு, கோயம்புத்தூா் விரைவு ரயில்கள் ஆவடியில் இருந்தும் இயக்கப்பட்டன. மேலும், ஏலகிரி, ஆலப்புழை விரைவு ரயில்களும் கடற்கரையில் இருந்தும் இயக்கப்பட்டன. வெளிமாநிலங்களில் இருந்து வரும் இந்தூா்-கொச்சுவேலி விரைவு ரயில், தன்பாத்-ஆலப்புழை விரைவு ரயில் சென்னை சென்ட்ரல் வருவதற்கு பதிலாக கடற்கரை வழியாக இயக்கப்பட்டன.

எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு முழுவதும் அடுத்து வரும் நாள்களில் அதிக அளவில் மழை இருக்கும் என எச்சரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு ரயில்களில் பயணிகள் எளிதாக செல்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கபாதைகளில் தேங்கும் தண்ணீா் அளவு தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சரிசெய்ய ரயில்வே பொறியியல் துறை தயாா் நிலையில் உள்ளது.

தண்ணீா் தேங்கி காணப்படும் பகுதியில் பாதுகாப்பு கருதி ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரயில்கள் இயக்குவதில் சிறிது காலதாமதம் ஏற்படலாம். அதற்கேற்ப பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிட வேண்டும். மேலும், மழையின் அளவை பொருத்து ரயில்களின் இயக்கம் தடை செய்யப்படும்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 2:38 AM

ரயில்கள் இயக்கம் குறித்த தகவல்களை பொதுமக்கள் ரயில்வே உதவி எண் 139, சென்னை கோட்ட உதவி எண் 044-25330952, 044-25330953 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.