ஆயிரமாண்டு மடமையைப் பொசுக்கிய அறிவுத்தீ: பெரியார் குறித்து மு.க. ஸ்டாலின் ட்வீட்!
பெரியார் பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலினின் எக்ஸ் பதிவு...
ஆயிரமாண்டு மடமையைப் பொசுக்கிய அறிவுத்தீ என பெரியார் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
பெரியார் பிறந்த நாளையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அவரை நினைவு கூர்ந்து கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகேவுள்ள பெரியாரின் சிலையின் கீழே வைக்கப்பட்டுள்ள படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, சேகர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,
"புரட்டுக் கதைகளுக்கும் - வறட்டு வாதங்களுக்கும் வளைந்து கொடுக்காதீர்கள். எல்லாவற்றுக்கும் மேலானது சுயமரியாதை என இனமான உணர்வூட்டி நிமிர்நடை போட வைத்த பகுத்தறிவுப் பகலவனுக்குப் புரட்சி வணக்கம்!
இன்று உலகம் முழுவதும் தமிழர் உயர்ந்த நிலைகளில் இருப்பதற்கு, தந்தை பெரியாரின் சிந்தனையும் உழைப்புமே அடித்தளம்!
ஆயிரமாண்டு மடமையைப் பொசுக்கிய அவரது அறிவுத்தீதான், நமது பாதைக்கான வெளிச்சம்! அந்த வெளிச்சத்தில் சமத்துவ உலகத்தை நிறுவுவதே நமது தலையாய பணி!" என்று பதிவிட்டுள்ளார்.