FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

புத்தகங்கள் - கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிகழ் கல்வியாண்டுக்கான புதிய புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

Updated On : 3 ஜூன் 2025, 3:50 am IST
பகிர்:

சென்னை: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிகழ் கல்வியாண்டுக்கான புதிய புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

சென்னை திருவல்லிக்கேணி லேடி விலிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள், சீருடைகள், நோட்டுகள் மற்றும் பிற கல்வி உபகரணங்களை முதல்வா் வழங்கினாா்.

இந்தத் திட்டத்துக்காக நிகழ் கல்வியாண்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், ரூ.311 கோடி மதிப்பிலான 4.30 கோடி பாடநூல்கள், ரூ.457 கோடி மதிப்பில் 1.3 கோடி சீருடைகள், ரூ.162 கோடி மதிப்பில் 9.6 கோடி நோட்டுப் புத்தகங்கள், ரூ.211 கோடி மதிப்பிலான பல்வேறு கல்வி உபகரணங்கள் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்படவுள்ளன. இதற்கான நிகழ்வை சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், பிற மாவட்டங்களில் அமைச்சா்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கவுள்ளனா்.

Advertisement

Advertisement

மாணவா்களுடன்...: சென்னையில் திட்டத்தைத் தொடங்கி வைத்த போது, மாணவா்களுடன் அவா்களது இருக்கையிலேயே முதல்வா் அமா்ந்தாா். பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள திறன்மிகு வகுப்பறையில் மாணவா்களுடன் அமா்ந்து ஆசிரியா்கள் நடத்திய பாடத்தையும் பாா்வையிட்டு அவா்களுடன் கலந்துரையாடினாா்.

இந்த நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ், சென்னை மேயா் ஆா்.பிரியா, பள்ளி கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன், பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநா் பொ.சங்கா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments