தூத்துக்குடி கடலில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநர் உள்பட இருவர் பலி!
தூத்துக்குடி கடலில் மூழ்கி இருவர் பலி தொடர்பாக...
தூத்துக்குடி: தூத்துக்குடி மொட்டகோபுரம் கடலில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநர் உள்பட இருவர் பலியாகினர்.
தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்த சூசைமாணிக்கம் மகன் அந்தோணி விஜயன்(40). ஆட்டோ ஓட்டுநரான இவர் கோமஸ்புரம் நேரு நகர் சுனாமி காலனியைச் சேர்ந்த முருகன் மகள் காளிஸ்வரி(16) உள்பட சிறுவர், சிறுமிகளை அழைத்துக்கொண்டு மொட்டை கோபுரம் கடற்கரையில் திங்கள்கிழமை மாலையில் குளித்துக்கொண்டிருந்தனராம்.
அப்போது, எதிர்பாராதவிதமாக காளிஸ்வரி கடலில் மூழ்கினாராம். அவரைக் காப்பாற்றச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் அந்தோணி விஜயனும் கடலில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது.
Advertisement
இதையடுத்து, கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் தாளமுத்துநகர் போலீஸார், கடலோர பாதுகாப்புக்குழு போலீஸார், மீனவர்கள் ஆகியோர் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சிறுமி காளிஸ்வரி உடல் திங்கள்கிழமை இரவு கரை ஒதுங்கியது. இதனைத் தொடர்ந்து அந்தோணி விஜயன் உடல் திங்கள்கிழமை காலையில் அங்கிருந்த பாறை இடுக்கில் இருந்து மீட்கப்பட்டது.
இவர்கள் இருவரது சடலத்தையும் கடலோர பாதுகாப்புக் குழு போலீஸார் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: காரைக்குடியில் அரசுப் பேருந்து-பால் வாகனம் மோதல்: 3 பேர் பலி!