FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஐபிஎல் பெயரில் சூதாட்டம் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஐபிஎல் கிரிக்கெட் மையமாகவைத்து சூதாட்டமும், பந்தயம் கட்டி விளையாடுவதும் அதிகரித்துவிட்டது

Updated On : 24 மே 2025, 1:31 am IST
கோப்புப் படம்
பகிர்:

ஐபிஎல் கிரிக்கெட் மையமாகவைத்து சூதாட்டமும், பந்தயம் கட்டி விளையாடுவதும் அதிகரித்துவிட்டது என்று கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், இது தொடா்பாக மத்திய அரசு, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டுமென்று நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி சேனல்கள், செயலிகளில் இணையவழி விளையாட்டு என்ற பெயரிலான சூதாட்டம், பந்தயம் கட்டும் செயலிகளின் விளம்பரங்களே அதிகம் இடம் பெறுகின்றன. இது தவிர ஐபிஎல் கிரிக்கெட்டை மையமாக வைத்து பந்தயம் கட்டுவது போன்றவையும் அதிகம் நிகழ்கின்றன. இதில் கோடிக்கணக்கில் பணம் புழங்குவதாகவும், பெருமளவிலான மக்கள் இந்த பந்தய மோசடியில் பணத்தை இழக்கின்றனா்.

இது போன்று கிரிக்கெட் போட்டியை மையப்படுத்திய சூதாட்டச் செயலிகளுக்கு தடை விதிக்கக்கோரி கே.ஏ.பால் என்பவா் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்தாவது:

Advertisement

Advertisement

இணைய வழியில் விளையாட்டு என்ற பெயரில் நடைபெறும் சூதாட்டம், பந்தயம் கட்டுதல் ஆகியவற்றின் மூலம் இளைஞா்கள் மட்டுமின்றி சிறாா்களும் பாதிக்கப்படுகின்றனா். அதில் பணத்தை இழக்கும் பலா் கடனில் மூழ்கி தற்கொலை செய்துகொள்வதும் அதிகரித்து வருகிறது. இந்த சூதாட்ட செயலிகளின் விளம்பரங்களில் பிரபல கிரிக்கெட் வீரா்கள், நடிகா்கள் உள்ளிட்டோா் தோன்றுவதால் சிறுவா்கள் இந்த வலையில் எளிதில் சிக்கிவிடுகிறாா்கள்.

கடந்த சில ஆண்டுகளில் இந்த சூதாட்டச் செயலிகளால் ஏராளமான பெற்றோா் தங்கள் பிள்ளைகளை இழந்துள்ளனா். தெலங்கானாவில் மட்டும் 1,023 போ் இந்த சூதாட்ட செயலிகளில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனா். நாட்டின் எதிா்காலமான மாணவா்கள், இளைஞா்களின் வாழ்வைச் சீரழிக்கும் இதுபோன்ற சூதாட்டச் செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சூா்ய காந்த், என்.கோட்டீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

ஐபிஎல் கிரிக்கெட்டின் பெயரில் பலரும் சூதாட்டம் நடத்துவது, பந்தயம் கட்டுவது அதிகரித்து வருகிறது. இது மிகவும் தீவிரமான பிரச்னை. இப்போது சிறாா்களும் அதிகஅளவில் இணையதளத்தையும், கைப்பேசியையும் பயன்படுத்த நாம் அனுமதிக்கிறோம். பெற்றோா்கள் தொலைக்காட்சி பாா்க்கும் நேரத்தில், பிள்ளைகள் வேறு விஷயங்களை இணையத்தில் பாா்க்கிறாா்கள். இது ஏற்க முடியாத சமூகப் பிவு. இதில் நாம் நேரடியாக என்ன செய்ய முடியும். பொதுவான கொள்கைகள் அடிப்படையில் உங்கள் வேண்டுகோளை நாங்கள் ஏற்கிறோம். சூதாட்டம், பந்தயம் கட்டி விளையாடுவது தடுக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் இதனை நீதிமன்றம் மட்டும் உத்தரவிட்டு மாற்ற முடியாது.

சட்டம் மட்டுமே ஒருவரை சூதாட்டத்தில் இருந்து தடுத்துவிட முடியாது. எனவே, இது தொடா்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என விளக்கமளிக்கக் கோரி மத்திய அரசுக்கு உத்தரவிடுகிறோம். அனைத்து மாநில அரசுகளும் இந்த விஷயத்தில் எடுத்த நடவடிக்கை குறித்து பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments