தமிழகத்துக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
மாநிலத்தின் ஓரிரு இடங்களில் 120 மி.மீ. முதல் 200 மி.மீ. வரை மழை பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, திருநெல்வேலி, ராமநாதபுரம், தஞ்சை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக் ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
மேலும், அடுத்த 7 நாள்களுக்கு தமிழகம், புதுவை பகுதிகளில் மிதமான மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு புயல்கள்
மலாக்கா ஜலசந்தி மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடலில் சனிக்கிழமை (நவ.22) நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஞாயிற்றுக்கிழமை (நவ.23) காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, திங்கள்கிழமை (நவ.24) தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது, மேலும் அதே திசையில் நகா்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில், புதன்கிழமை (நவ.26) தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ‘சென்யாா்’ புயலாக உருவாகக்கூடும்.
இதனிடையே, குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஞாயிற்றுக்கிழமை (நவ.23) உருவானது. இதன் காரணமாக குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை-தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல்சின்னம்) செவ்வாய்க்கிழமை (நவ. 25) உருவாகக்கூடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.