பேருந்து கவிழ்ந்து விபத்து: ஐயப்ப பக்தர்கள் காயம்!
சேலம் மேட்டூர் அணை அருகே சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்து.
சேலம் மேட்டூர் அணை அருகே சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்ததில் ஐயப்ப பக்தர்கள் காயமடைந்தனர்.
ஐயப்ப பக்தர்கள் 47 பேர் பேருந்தில் பயணித்த நிலையில் 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், பட்டியந்தல் பகுதியில் இருந்து, நேற்று(நவ. 29) 47 ஐயப்ப பக்தர்களை ஏற்றி வந்த பேருந்து, இன்று காலை மேட்டூர் அணையின் அடிவாரம் பகுதிக்கு வந்தது.
Advertisement
Advertisement
இந்தப் பேருந்தை தருமபுரி பகுதியைச் சேர்ந்த ஒட்டுநர் வேலு ஒட்டி வந்தார். காவிரி ஆற்றில் ஐயப்ப பக்தர்கள் குளிப்பதற்காக மட்டம் சாலையில் பேருந்து சென்றபோது, 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்தை கண்ட பொதுமக்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மாவட்ட மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
மேட்டூர் காவிரியில் புனித நீர் ஆடுவதற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் மட்டம் சாலையைப் போக்குவரத்துக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
நகராட்சிக்கு சொந்தமான இந்தச் சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு மண் சரிவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்து வருகிறது. இதனை சீரமைக்க கோரி பலமுறை அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் சாலையை சீரமைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சரிந்த சாலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் காரணமாக விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: இதுவரை இல்லாத சாதனையை படைத்த தமிழ் யூடியூப் சேனல்!