ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!
செங்கல்பட்டு அருகே ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் ராக்கெட் லாஞ்சர் வெடித்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதைப் பற்றி...
செங்கல்பட்டில் ராணுவ மையம் அருகே ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் ராக்கெட் லாஞ்சர் வெடித்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அருகே அனுமந்தபுரம் கிராமத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் உள்ளது. இந்தப் பயிற்சி தளத்தில் மத்திய, மாநில காவல் துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர் உள்பட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த பாதுகாப்பு வீரர்கள்அடிக்கடி துப்பாக்கி சுடுதல், ராக்கெட் லாஞ்சர் பயிற்சி மற்றும் வெடிகுண்டு வீசும் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மலைப்பகுதியான அனுமந்தபுரம் வனப்பகுதியில் வெடித்தும் வெடிக்காமல் கையெறி குண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள் ஆங்காங்கே அப்படியே கிடக்கும் என்றும் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பொறியியல் மின்னணுவியல் 4 ஆம் ஆண்டு படிக்கும் பெங்களூருவை சேர்ந்த இமான்ஷூ யாதவ் (21), ஹைதராபாத்தைச் சேர்ந்த விஷால் வேணுகோபால் (21), உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஆர்யன் சர்மா (21), ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த கிருஷ்ண சிராஜ் மஹாஜன் (21), தில்லியை சேர்ந்த நிஸ்காஷ் நிராஜ் (21), விராட் சஞ்சய் குமார் (23) ஆகியோர் அனுமதியின்றி, இந்தப் பயிற்சித் தளத்திற்கு அருகே உள்ள வனப்பகுதிக்கு திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் 3 மோட்டார் சைக்கிள்களில் ‘டிரெக்கிங்’ சென்றுள்ளனர்.
அவர்கள் அனைவரும் மலை உச்சிக்கு சென்ற நிலையில் அங்கு வெடிக்காமல் கிடந்த இரும்பு பொருள் ஒன்றை இமான்ஷூ யாதவ் என்ற மாணவர் எட்டி உதைத்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அது அருகில் இருந்த பாறையில்பட்டு பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறியது.
இதில் மார்பு, தோள்பட்டை மற்றும் கையில் பலத்த காயமடைந்த இமான்ஷூ யாதவ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். பலியான இமான்ஷூ, பெங்களூருவில் உள்ள விமானப்படையில் பணிபுரியும் ரமேஷ் சிங்கின் மகன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த வெடிவிபத்தில் விஷால், ஆர்யன் ஷர்மா, கிருஷ்ண சிராஜ், நிஸ்காஷ் ஆகிய 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த சிங்கப்பெருமாள் கோவில் காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த 4 மாணவர்களையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
மாணவன் எட்டி உடைத்தது ராக்கெட் லாஞ்சரா? அல்லது வெடிகுண்டா? என்பது குறித்து வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்த பின்னர் இதுதொடர்பான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
An engineering student died, and four others were injured after kicking an abandoned iron object suspected to be unexploded ordnance during trekking in Hanumanthapuram near Maraimalai Nagar on Monday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.