வழக்குரைஞரான பேரறிவாளன்! தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு!
சட்டப்படிப்பை முடித்த பேரறிவாளன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்தது குறித்து...
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்குரைஞராக பேரறிவாளன் இன்று (ஏப். 27) பதிவு செய்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் சட்டப்படிப்பை முடித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், இவர்கள் அனைவரையும் உச்சநீதிமன்றம் முன்கூட்டியே விடுதலை செய்தது.
Advertisement
சிறையில் இருந்தபோது பேரறிவாளன் இளநிலை, முதுகலை மற்றும் எம்.பில்., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்தார். இந்தநிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த பேரறிவாளன், பெங்களூருவில் உள்ள சட்டக் கல்லூரியில் 3 ஆண்டு சட்டப்படிப்பில் சேர்ந்தார். சட்டப்படிப்பை முடித்த அவர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்தார்.
பேரறிவாளன் உள்பட 1,248 பேருக்கு வழக்குரைஞராகப் பதிவு செய்யும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற கூட்டரங்கில் நடந்த இந்த நிகழ்வுக்கு பார் கவுன்சில் தலைவர் பி.எஸ். அமல்ராஜ் தலைமை வகித்தார்.
பார் கவுன்சில் உறுப்பினரும், புதிய வழக்குரைஞர்கள் பதிவுக் குழுவின் தலைவருமான கே. பாலு உறுதிமொழியை வாசித்தார். பேரறிவாளன் உள்ளிட்டோர் வழக்குரைஞராக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பார் கவுன்சில் உறுப்பினர் பிரிசில்லா பாண்டியன் நன்றி தெரிவித்தார்.