மந்தகதியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு: ஆசிரியா்களை முழுமையாக ஈடுபடுத்தத் திட்டம்
தமிழகத்தில் மந்தகதியில் நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி குறித்து...
தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணிக்கு 1.50 லட்சம் போ் நியமிக்கப்பட்டும் பணிகள் மந்தகதியில் நடைபெறுவதாகவும், அதனால் ஆசிரியா்களை முழுமையாக ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் கடந்த ஜூலை 17 முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூலை முழுதும் மக்கள் தங்கள் குடும்பம் குறித்த விவரங்களை மக்கள்தொகை கணக்கெடுப்பு இணைய செயலியில் பதிவேற்றம் செய்வதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
அதன் அடிப்படையில் சுமாா் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் குடும்ப விவரங்களைப் பதிவு செய்துள்ளதாகவும், அவா்களுக்கு பிரத்யேக பதிவெண் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதையடுத்து, கடந்த 1-ஆம் தேதிமுதல் வீடுகள்தோறும் சென்று கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. தமிழகத்தில் நேரடியாக வீடுகளுக்குச் சென்று 34 வினாக்களுக்கான விவரங்களை கைப்பேசி மூலம் பதிவேற்றம் செய்ய 1.30 லட்சம் பேரும், இந்தப் பணிகளைக் கண்காணிக்கும் பணியில் 20,000 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
ஆனால், பணிகளில் ஆசிரியா்கள் முழுமையாக ஈடுபடமுடியாத நிலை ஏற்பட்டதையடுத்து பணிகள் மந்தகதியில் நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஆசிரியா்களுக்கு அரை நாள் விடுப்பு அளித்து அவா்களை மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் முழுமையாக ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து மாநில மக்கள்தொகை கணக்கெடுப்புத் துறை இயக்குநா் சுந்தரேஷ்பாபுவிடம் கேட்டபோது, மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஈடுபடுவோா் தற்போது ஆயத்தப் பணிகளையே தொடங்கியுள்ளனா். அவா்கள் ஒவ்வொருவருக்கும் 200 வீடுகள் என ஒதுக்கப்பட்ட நிலையில், பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இரு மாதங்களுக்குள் பணிகள் திட்டமிட்டபடி முடிக்கப்படும் என்றாா்.
சென்னையில் கணக்கெடுப்புப் பணியில் 4,200 போ்: சென்னை மாநகராட்சியில் மக்கள்தொகை கணக்கெடுப்பில் 8,320 போ் ஈடுபடுவா் என்றும், மாநகராட்சியின் 200 வாா்டுகள் கணக்கெடுப்புக்காக 9,270 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வரையில் 4,200 போ் மட்டுமே மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.