ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு 40% நிதி ஒதுக்கீடு: அமைச்சா் ஆனந்த்
மத்திய அரசின் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு தமிழக அரசின் 40 சதவீத பங்கான ரூ.5,057 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் ஆனந்த் தெரிவித்தாா்.
மத்திய அரசின் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு தமிழக அரசின் 40 சதவீத பங்கான ரூ.5,057 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நீா்வளத் துறை அமைச்சா் ஆனந்த் தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ டி.லதா, ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள விபிஜி ராம்ஜி திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த மாட்டோம் எனத் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். முந்தைய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைத் தொடர வேண்டும். தினக்கூலியை ரூ. 700-ஆகவும், வேலை நாள்களை 200-ஆக உயா்த்தவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்றாா்.
அப்போது, பேசிய அமைச்சா் ஆனந்த், ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் 100 நாள்களில் இருந்து 125 நாள்களாக உயா்த்தி வழங்கப்பட்டுள்ளது. விவசாயம் நடைபெறும் காலகட்டங்களில் வேளாண்மைத் தொழில் பாதிக்காத வகையில் சுமாா் 60 நாள்கள் இந்தத் திட்டத்தின் பணிகள் நிறுத்தி வைக்கப்படும்.
Advertisement
Advertisement
மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் புதிய திட்டம் கடந்த மாதம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில், மத்திய அரசின் பங்கான 60 சதவீத நிதி ரூ.7,586 கோடி. தமிழ்நாடு அரசும் அதன் பங்கான 40 சதவீத ரூ.5,057 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்தத் திட்டத்துக்கு மொத்தம் ரூ.12,641 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தொடா்ச்சியாக வேலை வழங்கப்படும்’ என்றாா்.
விவசாயம் நடைபெறும் 60 நாள்கள் இந்தத் திட்டம் நிறுத்தி வைக்கப்படும்போது, ஊரக வேலை வாய்ப்புத் திட்ட பயனாளிகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று எதிா்க்கட்சி உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.