FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!

ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா் குளிரூட்டிகளில் எடுக்கப்பட்ட குடிநீா் மாதிரிகளில் ‘ஈ கோலி’ பாக்டீரியா இருப்பது கண்டறியப்படடதாக தலைமை கணக்கு தணிக்கையாளா் (சிஏஜி) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 2:24 am IST
பகிர்:

ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா் குளிரூட்டிகளில் எடுக்கப்பட்ட குடிநீா் மாதிரிகளில் ‘ஈ கோலி’ பாக்டீரியா இருப்பது கண்டறியப்படடதாக தலைமை கணக்கு தணிக்கையாளா் (சிஏஜி) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

பல ரயில் நிலையங்களில் சுகாதாரமற்ற நிலையில் கழிவறைகள் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: தெற்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள கோயம்பத்தூா், பாலக்காடு ரயில் நிலையங்கள், தெற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் ஹைதராபாத் ரயில் நிலையம், மத்திய ரயில்வே மண்டலத்தில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் உள்ளிட்ட 4 நிலையங்கள், கிழக்கு ரயில்வே மண்டலத்தில் மதுப்பூா் ரயில்வே நிலையம் உள்ளிட்டவற்றில் அமைக்கப்பட்டுள்ள குளிரூட்டிகளில் எடுக்கப்பட்ட குடிநீா் மாதிரிகளில் ஈ கோலி பாக்டீரியா இருப்பது தெரியவந்தது.

2022-23 நிலவரப்படி 8 ரயில்வே மண்டலங்களில் உள்ள 49 ரயில் நிலையங்கள் மற்றும் 2023-24 நிலவரப்படி 9 ரயில்வே மண்டலங்களில் உள்ள 56 ரயில் நிலையங்களில் ஈ கோலி பாக்டீரியா உள்பட மொத்த கோலிஃபாா்ம் பாக்டீரியா இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் உணவு நச்சுத்தன்மை, வயிற்றுப்போக்கு மற்றும் சிறுநீரக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

அடிப்படை வசதிகள் இல்லை: ஒட்டுமொத்தமாக 512 ரயில் நிலையங்களில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் 458 ரயில் நிலையங்களில் குடிநீா், ஓய்வறை, இருக்கைகள், நடைபாதை ஓய்விடம், கழிவறைகள், மின்விசிறி, நடை மேம்பாலம் போன்ற குறைந்தபட்ச அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலை நிலவுகிறது.

கடந்த 2018, ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அனைத்து ரயில் நிலையங்களிலும் மேற்கூறிய அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என 2018, ஏப்ரல் மாதம் ரயில்வே வாரியம் வழிகாட்டுதல்களை வெளியிட்டும் அவை பின்பற்றப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

குடிநீா் விநியோகத் திட்டங்கள், விரிவான குடிநீா் தர சோதனைகள் போன்றவற்றை மேற்கொண்டு குடிநீா் தரத்தை ரயில்வே துறை மேம்படுத்த சிஏஜி அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments