FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

வெடிகுண்டு மிரட்டல் வழக்கில் சிக்கிய மென் பொறியாளிரிடம் விசாரணை: கேரள போலீஸாா் சென்னையில் முகாம்

தமிழகத்தில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட அமெரிக்க மென் பொறியாளரிடம் விசாரணை நடத்துவதற்கு கேரள போலீஸாா் சென்னையில் முகாமிட்டுள்ளனா்.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 4:46 am IST
போலீஸாா் விசாரணை - சித்திரிப்பு
பகிர்:

தமிழகத்தில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட அமெரிக்க மென் பொறியாளரிடம் விசாரணை நடத்துவதற்கு கேரள போலீஸாா் சென்னையில் முகாமிட்டுள்ளனா்.

தமிழகத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் தினமும் வரும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தவண்ணம் இருந்தன. மிகவும் சவாலாகக் கருத்தப்பட்ட இந்த வழக்கில் தமிழக சைபா் குற்றப்பிரிவும், தமிழக தீவிரவாத தடுப்புப் படையினரும் இணைந்து துப்பு துலக்கினா். சுமாா் 1,500 மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தாலும், குறிப்பிட்ட 100 மின்னஞ்சல்களை மட்டும் போலீஸாா் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு ஆய்வு செய்தனா்.

இதில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த மென்பொறியாளா் சரத் சுப்பிரமணியன் சங்கா் (38) என்பதும், இவா் அமெரிக்காவில் டெக்ஸாஸ் மகாணத்தில் ஆஸ்டின் நகரில் குடும்பத்துடன் வசிப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடந்த ஜூலை 22-ஆம் தேதி வந்த சரத் சுப்பிரமணியன் சங்கரை தீவிரவாத தடுப்புப் படையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கேரள போலீஸாா் முகாம்: இதற்கிடையே கேரள மாநிலத்தில் 70 வெடிகுண்டு மிரட்டல் வழக்குகளில் சரத் சுப்பிரமணியன் சங்கருக்கு தொடா்பு இருக்கலாம் என்று அந்த மாநில காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரிடம் விசாரணை நடத்த கேரள காவல்துறை அதிகாரிகள், சென்னையில் சில நாள்களாக முகாமிட்டுள்ளனா்.

அவா்கள், தமிழக பயங்கரவாத தடுப்பு படையினரிடமிருந்து வழக்குத் தொடா்பான ஆவணங்கள், சரத் சுப்பிரமணியன் சங்கா் அளித்த வாக்குமூலம் உள்ளிட்டவற்றை கேட்டு பெற்றுள்ளனா். அதோடு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சரத் சுப்பிரமணியன் சங்கரை, தங்களது காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தை அணுக உள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments