அந்த விடியோவில் இருப்பது நான் இல்லை: அமைச்சர் கீர்த்தனா விளக்கம்!
சமூக ஊடகங்களில் பரவிய விடியோ பற்றி விளக்கமளிக்கும் விதமாக அமைச்சர் கீர்த்தனா பதிவிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் கடந்த இரு நாள்களாக ஒரு பெண்ணின் விடியோ வைரலாகப் பரவியது. மாடர்ன் உடையணிந்து காரிலிருந்து இறங்கி வரும் பெண், தவெக அமைச்சர் கீர்த்தனாவைப் போன்று இருப்பதாக பலரும் சமூக ஊடகங்களில் அதனைப் பகிர்ந்தனர்.
மேலும், விடியோவில் அந்தப் பெண் அணிந்திருந்த உடையும் பலரால் விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில், அந்த விடியோவில் இருப்பது தான் அல்ல என்றும் பெண்ணின் உடையை வைத்து விமர்சிப்பது பிற்போக்குத்தனமான மனநிலை என்றும் அமைச்சர் கீர்த்தனா சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
அமைச்சர் கீர்த்தனா தனது பதிவில், “ஒரு பெண் தனது அன்றாட வேலையைச் செய்யும் ஒரு காணொலி, அரசியல் களத்தில் இத்தகைய கீழ்த்தரமான உணர்ச்சிகளைத் தூண்ட முடியும் என்பதே, அதன் பின்னணியில் உள்ள பலவீனமான, பிற்போக்குத்தனமான மனநிலையைப் பற்றிச் சொல்லிவிடுகிறது. எனக்கு இதில் எந்த ஆச்சரியமுமில்லை.
பெண்களுக்கு எதிராக இழிவான கருத்துக்களைக் கூறிய வரலாறு கொண்ட தலைவரின் ஆதரவாளர்களிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்?
அந்தக் காணொலியில் இருக்கும் பெண் நான் அல்ல என்பதைத் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன். அது நானாக இருந்தாலுமே, அதனால் என்னவாகப் போகிறது?
ஒரு பெண்ணின் உடை, தோற்றம் அல்லது மகிழ்ச்சி போன்றவை ஏன் இன்னும் பொதுவெளியில் விவாதமாக்கப்படுகின்றன?
எங்கள் ஆட்சியின் கொள்கைகள், ஆட்சிமுறை மற்றும் செயல்பாடுகள் பற்றி கேள்வி கேட்க முடியாதவர்கள், எங்களின் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி வதந்திகளை உருவாக்குகிறார்கள். ஆக்கப்பூர்வமாக சிந்திக்க முடியாதவர்களின் மிகப் பழமையான ஆயுதம் பெண் வெறுப்பு.
காணொலியில் மேலோட்டமான ஒற்றுமையின் காரணமாக இந்த விவகாரத்தில் பேசுபொருளான அந்தப் பெண்ணுக்கு நான் சொல்லிக் கொள்வது, மன்னிக்கவும். நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். உங்கள் விருப்பப்படி நீங்கள் தொடர்ந்து வாழ்வீர்கள் என்று நம்புகிறேன்!” என்று தெரிவித்துள்ளார்.
Minister Keerthana has posted a clarification regarding the video that circulated on social media.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.