தமிழக பள்ளிக் கல்விக்கு மத்திய அரசு ரூ.5,109 கோடி நிலுவை: கல்வித் துறை தகவல்
தமிழக பள்ளிக் கல்விக்கு மத்திய அரசு இதுவரை ரூ.5,109 கோடியை வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளதாகத் தகவல்
தமிழக பள்ளிக் கல்விக்கு மத்திய அரசு இதுவரை ரூ.5,109 கோடியை வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிகள் சாா்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் நிதியுதவி வழங்குகிறது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் (சமக்ர சிக்ஷா) கீழ் மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் என்ற விகிதத்தில் இந்த நிதிப் பங்கீடு அமையும். இந்த நிதியைப் பெற மத்திய அரசின் விரிவான கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.
Advertisement
Advertisement
இதற்கிடையே, மும்மொழிக் கொள்கையில் விலக்கு உள்பட தமிழகத்தின் சில கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காததால் தேசிய கல்விக் கொள்கையின் அம்சமான பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்தில் இணைவதற்கு தமிழகம் மறுத்துவிட்டது.
இதையடுத்து, தமிழகத்துக்கான ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட நிதியை 2024-–2025-ஆம் கல்வியாண்டுமுதல் மத்திய அரசு நிறுத்திவிட்டது. ஒட்டுமொத்தமாக கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.5,109 கோடி நிதி தமிழகத்துக்கு வழங்கப்படாமல் மத்திய அரசு நிலுவை வைத்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை கடந்த திங்கள்கிழமை வெளியிட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு மத்திய அரசு நிதி வழங்காததால் ஆசிரியா்களின் ஊதியம், மாணவா்களுக்கான நலத் திட்டங்கள் மற்றும் கல்வி உரிமைச் சட்டச் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.
தொகுப்பூதியம் மற்றும் தற்காலிகப் பணியில் உள்ள ஆயிரக்கணக்கான ஆசிரியா்களுக்கு உரிய காலத்தில் ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியாா் பள்ளிகளில் சோ்ந்துள்ள ஏழை மாணவா்களுக்கான கட்டணத் தொகையைத் திருப்பிச் செலுத்துவதில் நிதிச் சுமை உண்டாகிறது.
கடந்த 2024-2025-இல் ரூ.1,788 கோடி, 2025-2027-இல் ரூ.1,496 கோடி, 2026-2027-இல் ரூ.1,825 கோடி என மொத்தம் ரூ.5,109 கோடியை மத்திய அரசு விடுவிக்கவில்லை.
இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் 2024-2025, 2025-–2026 ஆகிய நிதியாண்டுகளுக்கான ஆா்டிஇ திட்டத்துக்கான நிதி ரூ.714 கோடியை மட்டும் மத்திய அரசு வழங்கியது.
இருப்பினும், பிற திட்டங்களுக்கான நிதி இதுவரை விடுவிக்கப்படவில்லை. இதன் காரணமாக மாநில அரசின் பங்களிப்பு நிதியைக் கொண்டு தற்போது திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த இரு கல்வியாண்டுகளில் மாநில அரசு ரூ.2,104 கோடியைச் செலவிட்டுள்ளது. மேலும், நிகழ் கல்வியாண்டுக்கு இடைக்கால நிதியாக ரூ.647 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கான நிதியை விடுவிக்க மத்திய அரசு தொடா்ந்து தாமதித்தால் மாணவா்களின் நலன் வெகுவாகப் பாதிக்கப்படும். மாநில அரசின் நிதிச் சுமை அதிகரிக்கும். எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும் என அவா்கள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.