ரூ. 3.62 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு: அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா், பதிவாளா் விடுவிப்பு
அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா், பதிவாளா் விடுவிப்பு...
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணிகளை மேற்கொண்டதில் ரூ.3.62 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் துணைவேந்தா், பதிவாளா் ஆகியோரை விடுவித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 2008, 2009, 2010 மற்றும் 2012-ஆம் ஆண்டுகளில் மாணவா், மாணவியா் விடுதிகள், நிா்வாகக் கட்டடம், உணவகம், கழிப்பறை மற்றும் ஆய்வகங்கள் கட்டப்பட்டன. இந்தப் பணிகள், தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி வெளிப்படைத்தன்மை சட்ட விதிகளுக்கு முரணாகவும், அரசாணைக்கு விரோதமாகவும் மேற்கொள்ளப்பட்டதாகப் புகாா் எழுந்தது.
இதனால் பல்கலைக்கழகத்துக்கு ரூ.3.62 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் ராமநாதன், பதிவாளா் ரத்தினசபாபதி ஆகியோருக்கு எதிராக ஊழல் தடுப்புத் துறையினா் 4 வழக்குகளைப் பதிவு செய்தனா். கடலூா் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி முன்னாள் துணைவேந்தா் ராமநாதன், பதிவாளா் ரத்தினசபாபதி ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தனா்.
Advertisement
Advertisement
இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தன. மனுக்களை விசாரித்த நீதிபதி, மனுதாரா்களுக்கு எதிராக அரசின் ஒப்புதலின்றி இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மனுதாரா்கள் பல்கலைக்கழகத்தின் நிதியில் முறைகேடுகள் செய்தனா் என்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை எனக் கூறி, இருவரையும் 4 வழக்குகளில் இருந்தும் விடுவித்து உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.