ஒசூர் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் எண்ணிக்கை உயர்த்தப்படும்: அமைச்சர் அருண்ராஜ்
ஒசூர் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் எண்ணிக்கை உயர்த்தப்படும் என அமைச்சர் அருண்ராஜ் கூறியிருப்பது தொடர்பாக...
ஒசூர்: ஓசூர் தலைமை மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர் பற்றாக்குறையைப் போக்க, கூடுதலாக பணியிடங்கள் உருவாக்கப்பட்டு எண்ணிக்கை உயர்த்தப்படும்; இஎஸ்ஐ மருத்துவமனையை 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாகத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் கே.ஜே. அருண்ராஜ் தெரிவித்தார்.
ஒசூரில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 14 ஆவது மாநில மாநாட்டில் கலந்துகொண்ட பின்னர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.ஜே. அருண்ராஜ் செய்தியாளர்களுடன் பேசினார்.
அப்போது, தவெக ஆட்சி அமைந்த சில மாதங்களிலேயே புதிதாக 750 மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒசூர் தலைமை மருத்துவமனையில் உள்ள மருத்துவர் பற்றாக்குறையைப் போக்க, தற்போதுள்ள 27 மருத்துவர்களுடன் கூடுதலாக 9 இடங்கள் உருவாக்கப்பட்டு, மருத்துவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்த்தப்படவுள்ளது.
Advertisement
Advertisement
அதேபோன்று, செவிலியர் பற்றாக்குறையைச் சரிசெய்வதற்கு ஒசூர் மருத்துவமனைக்கு கூடுதலாக பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, மொத்தம் 125 செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
ஒசூர் இஎஸ்ஐ மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்
தொழிற்துறையினர் அதிகம் உள்ள ஒசூரில் 50 படுக்கைகளுடன் செயல்பட்டு வரும் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு போதிய இடம் வசதிகள் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மருத்துவத்துறையில் செய்யறிவு(ஏஐ)
காசநோய் தடுப்புத் திட்டத்தில் மார்பக எக்ஸ்-ரே ஆய்வுக்கு செய்யறிவு (ஏஐ) தொழில்நுட்பம் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிராமப்புறங்கள் மற்றும் தொலைதூர மலைப்பகுதி மக்களுக்கும் உயர்தர சிகிச்சை சென்றடைய வருங்காலத்தில் ஏஐ தொழில்நுட்பம் பெரிதும் உதவும்.
ரூ. 25 லட்சம் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு
இந்த திட்டம் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் முழுமையாகச் செயல்படுத்தப்படுகிறது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை உள்ளிட்ட உயர் சிகிச்சைகளுக்கு ரூ. 5 லட்சத்திற்கு மேற்பட்ட காப்பீடு தேவைப்படும் சூழலில், தகுதியுடைய அனைவரும் பயன்பெறும் வகையில் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டு வருகின்றன.
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்
தமிழகம் முழுவதும் டெங்கு பாதிப்பு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 720 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஏடிஸ் கொசு உற்பத்தியைத் தடுக்க கொசு ஒழிப்பு பணியாளர்கள் தீவிர களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் டெங்கு சிகிச்சைக்கு ஒரே மாதிரியான சிகிச்சை நெறிமுறைகள் வகுக்கப்பட்டு அனைத்து அரசு மற்றும் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மக்களைத் தேடி மருத்துவம்
மலைக்கிராமங்கள் மற்றும் எளிதில் சென்றடைய முடியாத பகுதிகளுக்கு 1.000 நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் மக்களைத் தேடி மருத்துவ சேவை தடையின்றித் தொடர்ந்து வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
Number of doctors and nurses at Hosur Government Headquarters Hospital to be increased: Minister Arunraj
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.