வெல்லப்போவது தமிழ்நாடு அணியா? தில்லி அணியா? என்பதை, முடிவு செய்யப்போவது இந்தத் தேர்தல் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் பேசியதாவது:
”தேர்தல் வந்துவிட்டால் மக்கள்தான் எஜமானர்கள். திராவிட மாடல் திட்டங்களை எடுத்துக் கூறுங்கள். 2026-ல் 200 தொகுதியில் நாம் வெல்ல முடியும். ஒவ்வொரு வாக்கும் நமக்கு முக்கியம்.
ஒவ்வொரு வீட்டிலும் நமது சாதனைகளை எடுத்துச் சொன்னால் அவர்களே மகிழ்ந்து நமக்கு வாக்களிப்பார்கள்.
75,000 வாக்குச்சாவடிகளில் தலா 350 வாக்குகளை நாம் பெற்றால் 2.62 கோடி வாக்குகளை நம்மால் பெறமுடியும். நட்போடு மக்களிடம் பேசுங்கள். நாம் வந்தால் சுயமரியாதை காக்கப்படும் எனச் சொல்லுங்கள்.
மக்களிடம் ஆளுங்கட்சிக்கு ஆதரவான மனநிலை உள்ளது. அதை வாக்குகளாக மாற்றுங்கள். மக்களை குறைந்தது 5 முறையாவது சந்தியுங்கள். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பலப் பணிகளை நாம் செய்துள்ளோம்.
வேறு யார் வந்தாலும் தமிழ்நாட்டை பாஜகதான் ஆளும். திமுக ஆட்சிக்கு வந்தால் அடுத்த 5 ஆண்டில் தமிழ்நாடு உலகநாடுகளுக்கு இணையாக வளறும். நாம் போராடுவது திமுகவின் வெற்றிக்காக அல்ல, தமிழ்நாட்டின் வெற்றிக்காக.
சாதனை செய்யாத துறைகளே இல்லை, அனைத்து துறைகளில் சாதனைப் படைத்துள்ளோம்.
என் சக்தியை மீறி உழைப்பேன் என்று சொன்னதுபோல, ஓய்வின்றி உழைத்து வருகிறேன். நாம் அனைவரும் உழைத்ததால்தான் திமுக முதல் இடத்தில் உள்ளது.
வெல்லப்போவது தமிழ்நாடு அணியா? தில்லி அணியா? என முடிவு செய்யப்போவது இந்தத் தேர்தல்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.