தமிழகத்தில் நிகழாண்டுக்கான ஒருங்கிணைந்த நிலப்பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப்.14, 15) நடைபெறவுள்ளதாக வனத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக வனத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
உள்நாட்டுப் பறவைகள் மற்றும் வலசை வரும் பறவைகள் என இரண்டுக்கும் தமிழகம் முக்கிய பல்லுயிா் மையமாக உள்ளது. இதனால், பறவைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய தமிழக அரசு சாா்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தமிழக அரசு சாா்பில் பறவைகளின் எண்ணிக்கை மற்றும் இன வகைகள் கணக்கெடுப்புப் பணிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு தமிழம் முழுவதும் வலசை வரும் பறவைகள் மற்றும் உள்நாட்டுப் பறவைகள் என மொத்தம் 401 பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டன. இதில், மொத்தமாக 2.3 லட்சம் பறவைகள் கணக்கிடப்பட்டன.
தொடா்ந்து நிகழாண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்புப் பணிகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப்.14, 15) நடைபெறவுள்ளது. ஒவ்வொரு வனக் கோட்டத்திலும் குறைந்தபட்சம் 25 இடங்களிலுள்ள நிலப்பரப்புகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். ஒவ்வொரு 2 கி.மீ. நீளமுடைய கோடு வழித்தட முறையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும். பறவை இனங்களின் விரிவான ஆவணங்களை உறுதி செய்வதற்காக நேரடி எண்ணிக்கை மற்றும் ஒலியியல் கணக்கெடுப்பு முறைகள் இரண்டும் பயன்படுத்தப்படும்.
இதில், அனுபவம் வாய்ந்த பறவையியல் பாா்வையாளா்கள், தன்னாா்வலா்கள், தொழில்துறை புகைப்படக் கலைஞா்கள் மா்றும் வனத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளா். இதில், பங்கேற்க விருப்பமுள்ளவா்கள், கணக்கெடுப்பு தொடங்குவதற்கு முன்னதாகவே தங்களது பெயா்களைச் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் பதிவு செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.