முன்னாள் முதல்வர் கருணாநிதி கவலையோடு பதிவு செய்த சூழல் அரைநூற்றாண்டுக் காலம் கழிந்த பிறகும் மாறவில்லை என்பது வருந்தத்தக்கது என தமிழக இடைக்கால பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
தமிழக இடைக்கால பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து குறிப்பிட்டுப் பேசுகையில், 55 ஆண்டுகளுக்கு முன்பு, கருணாநிதி, 1971 - 72ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட அறிக்கையில்,
வரி விதிக்கும் உரிமை மத்திய அரசிடம் குவிந்து கிடக்கிறது. ஆனால் மக்கள் நலனைப் பேணிப் பெருக்குவதற்கான பங்கு மாநில அரசுகளிடம் நிறைந்து கிடக்கிறது. உரிமை ஒரு புறமும் கடமைப் பொறுப்பு மற்றொரு புறமும் இருக்கும்படியான விந்தை நிலைதான் நமது அனைத்துக் சிக்கல்களுக்கும் காரணம். எனவே, நிதி வருவாயைப் பகிர்ந்துகொள்ளும் தற்போதையை முறையை மாற்றி அமைக்க வேண்டும் என கருணாநிதி கவலையோடு பதிவு செய்த சூழல் அரைநூற்றாண்டுக் காலம் கழிந்த பிறகும் மாறவில்லை என்பது வருந்தத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.
பதினாறாவது நிதிக்குழுவின் இந்த அறிக்கை தமிழ்நாட்டிற்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. அனைத்து மாநிலங்களும், மத்திய வரிகளின் பகிர்ந்தளிக்கத்தக்க நிதியில் மாநிலங்களுக்கான பங்கை அதிகரிக்க வேண்டுமெனத் தெளிவாகக் கோரியிருந்த போதிலும், மாநிலங்களுக்கான பங்கானது 41 சதவீதமாகத் தொடர்வதாக நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது.
மேலும், மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்கள் விதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்வது குறித்து மாநில அரசுகள் முன்வைத்த கோரிக்கைகள் மீது நிதிக் குழுவின் அறிக்கையில் எந்தவிதமான பரிந்துரையும் இடம்பெறவில்லை என்பது வருந்தத்தக்கது என்று பதிவு செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.