வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் மாணவர் சேர்க்கை 97%-ஆக உயர்வு!
வேளாண்மை இடைக்கால நிதி நிலை அறிக்கை குறித்து...
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் 2021-ஆம் ஆண்டில் 74 சதவீதமாக இருந்த இளங்கலை மொத்த மாணவர் சேர்க்கை 2025-ஆம் ஆண்டில் 97 சதவீதமாக உயர்ந்துள்ளதாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
2026 2027 - வேளாண்மை இடைக்கால நிதி நிலை அறிக்கையை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில்,”வேளாண்மையை முன்னெடுத்துச் செல்வதில் வேளாண்மைக் கல்வி, ஆராய்ச்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்த அரசு பொறுப்பேற்றது முதல் ஐந்து வேளாண்மை நிதி நிலை அறிக்கைகளில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு ரூ. 3,065 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
Advertisement
கடந்த ஐந்து ஆண்டுகளில், 101 புதிய பயிர் ரகங்கள், 21 வேளாண் நுட்பங்கள், 16 புதிய பண்ணைக் கருவிகள் நமது உழவர் பெருமக்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
வேளாண் கல்வியின் தரம் பெருமளவு உயர்த்தப்பட்டதன் காரணமாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் 2021-ஆம் ஆண்டில் 74 சதவீதமாக இருந்த இளங்கலை மொத்த மாணவர் சேர்க்கை 2025-ஆம் ஆண்டில் 97 சதவீதமாக உயர்ந்துள்ளது.
விவசாயிகளுக்கான சேவைகளை ஒருங்கிணைக்கும் நோக்கில், விவசாயி பதிவு (Farmer Registry) திட்டத்தின் கீழ் ஆதார் எண்ணுடன் விவசாயிகளின் நில விவரங்களை இணைத்து 33 இலட்சம் பிரத்யேக விவசாயி அடையாள எண்கள் (Farmer ID) உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும், 24 முக்கிய சேவைகளுடன் 'உழவர்' கைபேசி செயலி செயல்படுத்தப்படுகிறது. இதுவரை சுமார் 20 லட்சம் விவசாயிகள் இச்செயலியைப் பதிவிறக்கம் செய்து அரசு சேவைகளைப் பெற்று வருகின்றனர்” என்று அமைச்சர் தெரிவித்தார்.