கட்சி யாருக்கு? சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு!
கட்சி விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு...
பாமக கட்சி விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் கட்சி யாருக்கு? என இழுபறி நீடித்து வருகிறது.
கடந்த டிசம்பர் இறுதியில் சேலத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பாமகவின் தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார். மேலும், அன்புமணியின் பதவிக் காலம் மே 29 ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டதாகவும் தேர்தல் கூட்டணியை முடிவு செய்யவும் தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யவும் ராமதாஸுக்கு முழு அதிகாரம் வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதனிடையே ஆவணங்களின் அடிப்படையில் அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் ஆதரவாக இருக்கிறது.
இதற்கு எதிராக ராமதாஸ் தில்லி உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் இன்று வழக்குத் தொடர்ந்துள்ளார்.
பாமக தங்களுக்கே சொந்தம், கட்சியில் தனக்கே முழு அதிகாரம் என்று உத்தரவிடக் கோரி ராமதாஸ் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு ரிட் மனுவில், பாமகவின் பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த அன்புமணி உள்ளிட்டோருக்குத் தடை விதிக்க வேண்டும், தேர்தல் மற்றும் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க ராமதாஸுக்கு அதிகாரம் என உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு ஓரிரு நாள்களில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அன்புமணி தரப்பு இணைந்துள்ளது. ராமதாஸ் தரப்பு யாருடன் கூட்டணி? என்ற கேள்வி எழுந்துள்ளது.