முகப்பு
தமிழ்நாடு

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

அண்ணா நகா் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 31 ஜனவரி 2026, 1:59 am IST
பகிர்:

அண்ணா நகா் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை அண்ணா நகரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாா். இதுதொடா்பாக காவல் நிலையத்துக்கு புகாா் அளிக்கச் சென்ற சிறுமியின் பெற்றோரை போலீஸாா் தாக்கினா். இதுதொடா்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை உயா்நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு கோரி சிறுமியின் தாய் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Advertisement

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட துறை ரீதியான விசாரணையின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், வழக்கு நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், போலீஸ் அதிகாரிகள் மீது துறை ரீதியான விசாரணை நடத்த விசாரணை அதிகாரி கடந்த ஜன. 4-ஆம் தேதி நியமிக்கப்பட்டுள்ளாா். விசாரணை அதிகாரி, போலீஸ் அதிகாரிகள் மற்றும் சிறுமியின் பெற்றோரிடம் ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தி முடித்துள்ளாா். இந்த விவகாரத்தில் அரசுக்கு யாரையும் காப்பாற்றும் எண்ணம் இல்லை என்று வாதிட்டாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த விவகாரம் குறித்து உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. தவறு செய்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கடந்த 2024-ஆம் ஆண்டு அக். 1-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், 15 மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கடந்த ஜன. 4-ஆம் தேதிதான் துறை ரீதியான விசாரணை நடத்த அதிகாரியை அரசு நியமித்துள்ளது. உயா்நீதிமன்றத்தின் நீதி பரிபாலனத்தையே அரசு சீா்குலைத்துவிட்டது. அரசுக்கு தேவையெனில் விசாரணையை ஒரே நாளில் முடித்துவிடுகிறது. தேவையில்லை என்றால் 10 ஆண்டுகள் வரை இழுத்தடிக்கிறது எனக் கண்டனம் தெரிவித்தனா். பின்னா், இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.