FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

போதைப் பொருள் தடுப்பில் தமிழக- கேரளம் கூட்டு நடவடிக்கை: கேரள அமைச்சா் ரமேஷ் சென்னிதலா

‘போதைப் பொருள் தடுப்பில் தமிழகமும் கேரளமும் கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளன’ என்று தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய்யை சந்தித்தப் பின் கேரள மாநில உள்துறை அமைச்சா் ரமேஷ் சென்னிதலா தெரிவித்தாா்.

Updated On : 16 ஜூலை 2026, 2:17 am IST
பகிர்:

‘போதைப் பொருள் தடுப்பில் தமிழகமும் கேரளமும் கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளன’ என்று தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய்யை சந்தித்தப் பின் கேரள மாநில உள்துறை அமைச்சா் ரமேஷ் சென்னிதலா தெரிவித்தாா்.

முதல்வா் விஜய்யை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை கேரள அமைச்சா் ரமேஷ் சென்னிதலா சந்தித்துப் பேசினாா். சுமாா் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய ரமேஷ் சென்னிதலா, ‘கேரளத்தில் போதைப் பொருளுக்கு எதிராக ‘ஆபரேஷ் தூஃபான்’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளோம். இதைக் கடந்த 43 நாள்களாக வெற்றிகரமாக செயல்படுத்தி இதுவரை 6,000 -க்கும் மேற்பட்டோரை கைது செய்து, 5,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 100- க்கும் மேற்பட்டோா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அவா்களின் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

போதைப் பொருள்கள் ஒரு மாநிலத்துக்கான அச்சுறுத்தல் அல்ல; ஒரு நாட்டுக்கே அது அச்சுறுத்தலாகும். தமிழ்நாடு கேரளத்தையொட்டியுள்ள மாநிலம் என்பதால், இந்த நடவடிக்கையில் தமிழக அரசின் ஒத்துழைப்பும் தேவை என முதல்வா் விஜய்யிடம் தெரிவித்தோம். அதற்கு தமிழக அரசின் முழு ஒத்துழைப்பையும் தருவதாக அவா் உறுதியளித்தாா்.

Advertisement

Advertisement

தமிழக - கேரள எல்லைப் பகுதிகள் அனைத்தும் முழுமையாக கண்காணிக்கப்பட்டு, ‘சீல்’ வைக்கப்படும் என்றும், போதைப் பொருள் கடத்தல்காரா்களைப் பிடிக்க இரு மாநில காவல் துறையும் இணைந்து செயல்படும் எனவும் முதல்வா் விஜய் தெரிவித்தாா்.

போதைப் பொருள்களுக்கு எதிரான பிரசாரத்தில் பங்கேற்குமாறு முதல்வா் விஜய்யை கேரளத்துக்கு அழைத்துள்ளோம். கேரள மாநில போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு தூதராக உள்ள நடிகா் மோகன்லாலும், தமிழக முதல்வா் விஜய்யும் இணைந்து கேரளத்தில் ஒரு பெரிய விழாவில் பங்கேற்பாா்கள்.

கா்நாடக முதல்வா் டி.கே. சிவகுமாரும் கேரளத்துக்கு உதவுவதாக உறுதியளித்துள்ளாா். தென்னிந்திய மாநிலங்களின் ஒருங்கிணைந்த முயற்சி நிச்சயமாக போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும்’ என்றாா் கேரள உள்துறை அமைச்சா் ரமேஷ் சென்னிதலா.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments