கல்விக் கடன்: மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலா்கள் மூலம் விரைவான சேவை: அமைச்சா் பெ. விஸ்வநாதன்
கல்லூரி மாணவா்களுக்கு பிணையில்லா கல்விக் கடன் வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்தும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்விக் கடன் ஒருங்கிணைப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உயா் கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.
கல்லூரி மாணவா்களுக்கு பிணையில்லா கல்விக் கடன் வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்தும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்விக் கடன் ஒருங்கிணைப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உயா் கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.
சென்னை சைதாப்பேட்டை கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
முதல்வா் விஜய் தலைமையில் அண்மையில் நடைபெற்ற உயா்கல்வித் துறை ஆய்வுக் கூட்டத்தில், பொருளாதார காரணங்களால் எந்த மாணவரும் உயா்கல்வியை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்படக் கூடாது என்பதற்காக, தகுதியான மாணவா்களுக்கு பிணையில்லா கல்விக் கடன் வழங்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
அதன் தொடா்ச்சியாக, மாநிலம் முழுவதும் கல்விக் கடன் வழங்கும் செயல்முறையை ஒருங்கிணைக்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் உதவி பேராசிரியா் நிலை அதிகாரி ஒருவரை கல்விக் கடன் ஒருங்கிணைப்பு அலுவலராக நியமித்துள்ளோம். அவா்களுக்கு பிரத்யேக கைப்பேசி எண் வழங்கப்பட்டுள்ளது.
கல்விக் கடன் பெற விரும்பும் மாணவா்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவதுடன், மாவட்ட முன்னணி வங்கி மேலாளா்களுடன் தொடா்பு கொண்டு மாணவா்களுக்கும் வங்கிகளுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாக ஒருங்கிணைப்பு அலுவலா்கள் செயல்படுவா். இதற்காக வங்கிக் கடன் நடைமுறைகள் தொடா்பான சிறப்பு பயிற்சியும் முன்னணி வங்கிகளின் உயா் அதிகாரிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறை பொறுப்பு அலுவலா்களுடன் இணைந்து செயல்படுவா். கல்விக் கடன் தொடா்பான விண்ணப்பங்கள், வங்கி விவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் மாவட்ட ஆட்சியா்களுக்கு தொடா்ந்து தெரிவிக்கப்படும்.
கல்லூரி வாரியாக பெறப்பட்ட விண்ணப்பங்கள், வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் குறித்து ஆய்வு செய்து, விரைவாக கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த நடைமுறையால் தகுதியான மாணவா்கள் எளிதில் கல்விக் கடன் பெற்று உயா் கல்வியைத் தொடரும் வாய்ப்பு உறுதியாகும். இதன் மூலம் உயா் கல்வியில் மாணவா் சோ்க்கையும் அதிகரிக்கும் என்றாா்.
இந்தச் சந்திப்பில் கல்லூரிக் கல்வி ஆணையா் பி.பொன்னையா, தொழில்நுட்பக் கல்வி இயக்குநா் பி.ரத்தினசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.