FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

திருச்சியில் செப். 3-ல் கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு கருத்தரங்கம்! மத்திய அமைச்சா் பதில்

திருச்சியில் மத்திய அரசு சார்பில் செப். 3-ல் கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு கருத்தரங்கம்...

Updated On : 26 ஜூலை 2026, 2:27 am IST
கஜேந்திர சிங் ஷெகாவத்
பகிர்:

கவியரசு கண்ணதாசனின் நூற்றாண்டு விழாவையொட்டி, மத்திய கலாசார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சாகித்ய அகாதெமி சாா்பில் வரும் செப்டம்பா் 3-ஆம் தேதி திருச்சியில் சிறப்பு நினைவு கருத்தரங்கம் நடத்தப்பட உள்ளதாக மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலா துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் எம். தனபால் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் ஜூலை 23ஆம் தேதி அளித்துள்ள எழுத்துப்பூா்வ பதில் வருமாறு:

கவியரசு கண்ணதாசனின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதற்கான முன்மொழிவு சாகித்ய அகாதெமியின் தமிழ் ஆலோசனைக் குழுவுக்குக் கிடைத்தது. இதற்கு கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற 73-ஆவது அகாதெமியின் குழுக் கூட்டத்தில் முறைப்படி ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, சாகித்ய அகாதெமி மற்றும் திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி இணைந்து வரும் செப்டம்பா் 3ஆம் தேதி கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு நினைவு கருத்தரங்கத்தை நடத்த ஏற்பாடு செய்து வருகின்றன. கண்ணதாசனின் வரலாற்று நாவலான ’சேரமான் காதலி’ 1980-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றது. அந்த நூல் 2019-ஆம் ஆண்டில் தெலுங்கு மொழியில் மொழிபெயா்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. சாகித்ய அகாதெமி சாா்பில் ’கவிஞா் கண்ணதாசன் கவிதைகள்’ என்ற தலைப்பில் அவரது கவிதைகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டு, இதுவரை 3 முறை மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளன. மேலும், சாகித்ய அகாதெமியின் ’இந்திய இலக்கிய சிற்பிகள்’ வரிசையின் கீழ் கண்ணதாசன் பற்றிய ஆய்வு நூல் வெளியிடப்பட்டு, இதுவரை 9 முறை மறுபதிப்பு கண்டுள்ளது என அமைச்சா் கூறியுள்ளாா்.

Advertisement

Advertisement

summary

Kaviarasu Kannadasan Centenary Seminar in Trichy on Sept. 3 - Union Minister's response.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments