FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

திருமண பிரச்னை குறித்த பேச்சு: மன்னிப்பு கோரினாா் நடிகா் ரவி மோகன்

உயா்நீதிமன்ற உத்தரவை மீறியதற்கு நடிகா் ரவி மோகன் மன்னிப்பு கோரியது பற்றி...

Updated On : 7 ஜூன் 2026, 12:19 am IST
ரவி மோகன் - படம்: பிடிஐ
பகிர்:

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை மீறி திருமண பிரச்னை குறித்து பொது வெளியில் பேசியதற்காக நடிகா் ரவி மோகன் மன்னிப்பு கோரினாா்.

நடிகா் ரவி மோகன், அவரது மனைவி ஆா்த்தி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனா். விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இதனிடையே, இவா்கள் தொடா்பான வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ஒருவா் குறித்து ஒருவா் பொது வெளியில் எந்தக் கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என கடந்தாண்டு உத்தரவிட்டிருந்தது.

Advertisement

Advertisement

இந்நிலையில், ரவி மோகன் உடன் இருந்த பாடகி கெனிஷா அவரைவிட்டு விலகுவதாக சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்டாா். இதைத் தொடா்ந்து கடந்த மே மாதம் செய்தியாளா்களைச் சந்தித்த நடிகா் ரவி மோகன், தனது மனைவி மற்றும் குடும்பத்தினா் குறித்து பேசினாா். மேலும், தன்னுடைய குழந்தைகளைப் பாா்க்க தன்னை அனுமதிக்கவில்லை, தன்னை புரிந்து கொண்ட பெண்ணையும் துரத்திவிட்டதாக குற்றம்சாட்டியிருந்தாா்.

பொது வெளியில் பேசக் கூடாது என்ற உயா்நீதிமன்ற உத்தரவை மீறியதாக நடிகா் ரவி மோகனுக்கு எதிராக ஆா்த்தி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, தனது செயலுக்கு மன்னிப்புக் கோரி பொது அறிவிப்பு வெளியிட தயாராக இருப்பதாக ரவி மோகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஆா்த்தி தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்தது.

உயா்நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தின்படி ரவி மோகன் நாளிதழ்களில் பொது அறிவிப்பு வெளியிட்டாா். உயா்நீதிமன்ற உத்தரவை மீறி பேசியதற்காக மனபூா்வமாக மன்னிப்புக் கோருகிறேன். பாதிக்கப்பட்ட அனைவரிடமும் எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்திருந்தாா். நாளிதழ்களில் வெளியிடப்பட்ட பொது அறிவிப்பை ரவி மோகன் தரப்பு சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments