பவானி - துபைக்கு ரூ. 10,000! அரசுப் பேருந்து டிக்கெட்டால் அதிர்ச்சி!
அரசுப் பேருந்தில் வழங்கப்பட்ட பயணச்சீட்டால் பயணி அதிர்ச்சி...
பவானியில் இருந்து ஓசூருக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்தில் துபை என அச்சிடப்பட்ட பயணச்சீட்டு வழங்கப்பட்டதால் பயணி அதிர்ச்சி அடைந்தார்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், சேலம் மண்டலத்தின் கீழ் இயக்கப்படும் கோவை - பெங்களூரு வழித்தடப் பேருந்தில் பவானி புறவழிச் சாலை நிறுத்தத்தில் தாமோதரன் என்பவர் தனது நண்பருடன் கடந்த திங்கள்கிழமை ஏறியுள்ளார்.
ஓசூர் பேருந்து நிலையத்தில் இறங்க பேருந்து நடத்தினரிடம் அவர் பயணச்சீட்டு கேட்டுள்ளார்.
Advertisement
Advertisement
பவானி புறவழிச் சாலையில் இருந்து ஓசூருக்கு ரூ. 150 பேருந்து கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட பயணச்சீட்டில் ரூ. 10,000 என அச்சிடப்பட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
மேலும், அந்த பயணச்சீட்டில் பவானி புறவழிச்சாலை முதல் துபை என்று அச்சிடப்பட்டிருந்தது. பின்னர், அவருக்கு மாற்று பயணச்சீட்டு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தனக்கு வழங்கப்பட்ட பயணச்சீட்டின் புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் தாமோதரன் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த பயணச்சீட்டு வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றது.
இதனிடையே, பயணச்சீட்டு வழங்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட மென்பொருள் கோளாறு காரணமாகதான் தவறுக்கு காரணம் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.