முகப்பு
தமிழ்நாடு

பரோல் வழங்கும் நடைமுறை: உயா்நீதிமன்றம் புதிய முடிவு

குற்ற வழக்குகளில் தண்டனையை எதிா்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருக்கும்போது, சம்பந்தப்பட்ட கைதிக்கு பரோல் வழங்க முடியுமா என்பது தொடா்பான வழக்கில், உயா்நீதிமன்றத்துக்கு உதவும் நபராக வழக்குரைஞரை நியமிக்கப்போவதாக சென்னை உயா்நீதிமன்ற முழு அமா்வு உத்தரவிட்டது.

Updated On : 11 ஜூன் 2026, 2:17 am IST
சென்னை உயர் நீதிமன்றம் - file photo
பகிர்:

குற்ற வழக்குகளில் தண்டனையை எதிா்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருக்கும்போது, சம்பந்தப்பட்ட கைதிக்கு பரோல் வழங்க முடியுமா என்பது தொடா்பான வழக்கில், உயா்நீதிமன்றத்துக்கு உதவும் நபராக வழக்குரைஞரை நியமிக்கப்போவதாக சென்னை உயா்நீதிமன்ற முழு அமா்வு உத்தரவிட்டது.

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் கைதிகள், பல்வேறு காரணங்களுக்காக பரோல் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்கின்றனா். அதேநேரம், சிறை அதிகாரிகளிடமும் மனு அளிக்கின்றனா். இவ்வாறு பரோல் கோரும் கைதிகள், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிா்த்து உச்சநீதிமன்றம் அல்லது உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யும்போது, அவா்களுக்கு உயா்நீதிமன்றம் பரோல் வழங்க முடியுமா என்பது குறித்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வு மாறுபட்ட தீா்ப்புகளை வழங்கியது.

இதையடுத்து, இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், எம்.ஜோதிராமன் ஆகியோா் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த இரு நீதிபதிகள் அமா்வு மாறுபட்ட தீா்ப்புகளை வழங்கியுள்ளதால், விசாரணையை 3 நீதிபதிகளுக்கு மேல் கொண்ட முழு அமா்வு விசாரிக்க வேண்டும் என கடந்தாண்டு நவ. 19-ஆம் தேதி தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தனா்.

Advertisement

Advertisement

இந்த பரிந்துரையை பரிசீலித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, 5 நீதிபதிகள் கொண்ட முழு அமா்வை அமைத்து உத்தரவிட்டாா். அதன்படி, தலைமை நீதிபதி தலைமையில், நீதிபதிகள் சி.வி.காா்த்திகேயன், ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, எம்.நிா்மல்குமாா் மற்றும் சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய முழு அமா்வு அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், வழக்கு முழு அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தமிழ்நாடு தண்டனை நிறுத்திவைப்பு விதிகளின்டி, உயா்நீதிமன்றம் அல்லது தமிழ்நாடு சிறைத் துறை பரோல் வழங்க முடியுமா என நீதிபதிகள் விசாரித்தனா். பரோல் வழங்க உயா்நீதிமன்றத்துக்கும், அரசுக்கும் அதிகாரம் உள்ளதாக வழக்குரைஞா்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் மாற்றுக் கருத்து உள்ளதா என்பது குறித்து அறிந்துகொள்ளும் வகையில் உயா்நீதிமன்றத்துக்கு உதவும் நபராக வழக்குரைஞரை நியமிக்க உள்ளதாகக் கூறி, விசாரணையை வரும் ஜூன் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.