உலக சுற்றுச்சூழல் தினம்! ஆயுத் அமைப்பு சார்பில் தமிழகம், புதுவையில் மரக்கன்றுகள் நடும் இயக்கம்!
உலக சுற்றுச்சூழல் தினம்: ஆயுத் அமைப்பு சார்பில் தமிழகம், புதுவையில் மரக்கன்றுகள் நடும் இயக்கம் நடத்தப்பட்டதைப் பற்றி...
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ‘ஆயுத்’ அமைப்பு சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 17 அமிர்த வித்யாலயா பள்ளிகளில் ஒரே நேரத்தில் தேனீக்கள் பாதுகாப்புக்கான மரக்கன்றுகள் நடும் மாணவா்கள் இயக்கம் நடத்தப்பட்டது.
இதில் கலந்து கொண்ட மாணவர்கள், பள்ளி வளாகங்களுக்குள் தேனீக்கள் மற்றும் பிற மகரந்த சேர்க்கை உயிரினங்களை ஈர்க்கும் வகையிலான வேம்பு, வாழை, புங்கம், புளி, முருங்கை, நெருஞ்சி, இலந்தை, மா, நாவல், இலுப்பை, பூவரசு, கடம்பு உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
இந்த தாவரங்கள் தேனீக்கள், உள்ளூர் மகரந்தச் சோ்க்கை உயிரினங்கள், பறவைகள் ஆகியவற்றை பாதுகாப்பதோடு மண் வளம் மற்றும் வறட்சியைத் தாங்கும் திறனை மேம்படுத்த உதவுகிறது.
Advertisement
Advertisement
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார், ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் மேகலா, நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலர் ரேஷ்மி என். நாயர், கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை தற்காலிக இயக்கமாக அல்லாமல், நீண்டகால சமூகப் பொறுப்பாக இளைஞர்கள் ஏற்றுக்கொள்வது மிகவும் சிறப்பு வாயந்ததாக இருப்பதாக ஆயுத் அமைப்பின் தமிழகம் – புதுச்சேரி பிராந்திய ஒருங்கிணைப்பாளர்கள் பிரம்மச்சாரிணி குணதீதாமிர்த சைதன்யா மற்றும் பிரம்மச்சாரிணி சுவாதி ஆகியோா் தெரிவித்தனர்.