முகப்பு
தமிழ்நாடு

நீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

தமிழககத்தில் நீலகிரி, கன்னியாகுமரி , ராணிப்பேட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை பலத்த மழைக்கான வாய்ப்பு இருப்பதால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 12 ஜூன் 2026, 4:46 am IST
கோப்புப் படம்
பகிர்:

தமிழககத்தில் நீலகிரி, கன்னியாகுமரி , ராணிப்பேட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை பலத்த மழைக்கான வாய்ப்பு இருப்பதால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், தெற்கு ஆந்திரம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுவதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) முதல் ஜூன் 17-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

Advertisement

Advertisement

குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் , தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் வெள்ளிக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களிலும், கோவை, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். இதனால், இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

வெப்ப அளவு: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்சத வெப்பநிலை ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஜூன் 15) வரை சற்று அதிகமாக இருக்கும்.

மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூா் பகுதியில் 90 மி.மீ. மழை பதிவானது. நாலுமுக்கு (திருநெல்வேலி), சின்னக்கல்லாறு (கோவை)-50 மி.மீ., ஊத்து (திருநெல்வேலி), அடையாமடை (கன்னியாகுமரி), சோலையாறு (கோவை), குண்டாறு அணை (தென்காசி)-40 மி.மீ., பாலமோா், சிற்றாறு- 1, பெருஞ்சாணி அணை, குளச்சல், புத்தன் அணை (கன்னியாகுமரி), காக்காச்சி (திருநெல்வேலி), உபாசி, வால்பாறை (கோவை), சின்கோனா (கோவை)-30 மி.மீ. மழை பதிவானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.