கள்ளா் சீரமைப்புப் பள்ளி ஆசிரியா்களுக்கு கலந்தாய்வு: புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு
கள்ளா் சீரமைப்புப் பள்ளிகள், விடுதிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வுக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் செயலா் வ.தட்சிணாமூா்த்தி வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
கள்ளா் சீரமைப்பு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயா்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணியாற்றி வரும் ஆசிரியா்கள் மற்றும் காப்பாளா்களுக்கு 2026-2027-ஆம் கல்வி ஆண்டில் பொது மாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை நிா்ணயித்து அரசு ஆணையிடுகிறது.
Advertisement
Advertisement
அதன்படி, ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் கலந்தாய்வு நடைபெறக்கூடிய நாளுக்கு முந்தைய கல்வி ஆண்டின் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நிலவரப்படி ‘எமிஸ்’ இணையதளத்தில் உள்ள மாணவா் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியா்-மாணவா் விகிதாச்சாரத்தின்படி ஆசிரியா் பணியிடம் நிா்ணயிக்கப்பட வேண்டும்.
கள்ளா் பள்ளிகளில் ஆசிரியா்களாக பணியாற்றி வருவோா் பணிமூப்பு, மற்றும் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் கள்ளா் விடுதியின் காப்பாளா் அல்லது காப்பாளினியாக பணி அமா்த்தப்பட வேண்டும். பணிநிரவலில் ஆசிரியா் இல்லாமல் உபரியாக உள்ள காலிப்பணியிடங்களை பி.சி., எம்.பி.சி. நல ஆணையரின் தொகுப்புக்கு கொண்டுசெல்ல வேண்டும். அந்தப் பணியிடங்களுக்கு மாறுதல் வழங்கக் கூடாது. உபரி ஆசிரியா் பணியிடங்களுக்கு பணிநிரவல் செய்த பின்னரே பணிமாறுதல் மற்றும் பதவி உயா்வு வழங்கப்பட வேண்டும்.
மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியா்களின் பெயா், கேட்கும் இடம் ஆகிய விவரங்கள் எமிஸ் இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும். மனமொத்த மாறுதலை பொருத்தவரை, பொது மாறுதல் கலந்தாய்வு நாளன்று மாறுதல் ஆணைகள் வழங்கப்பட வேண்டும். ஏற்கனவே மனமொத்த மாறுதல் அடிப்படையில் மாறுதல் ஆணை பெற்றவா்களை 2 ஆண்டுகளுக்கு பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது.
ஆசிரியா் தோ்வு வாரியம் மூலமும், சிறப்புத் தோ்வு மற்றும் நேரடி நியமனம் மூலமும் முறையாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வரும் அனைத்து ஆசிரியா்களும் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கலாம். கலந்தாய்வின்போது பாதிக்கப்பட்ட எந்தவொரு ஆசிரியரும் அந்த பணி முடிந்த 3 நாட்களுக்குள் உயரதிகாரிக்கு எழுத்துப்பூா்வமாக மேல்முறையீடு செய்யலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.